
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (50). இவருக்கு கவிதா என்ற மனைவியும்,காவியா என்ற 17 வயது மகளும்உள்ளனர். மகள் காவ்யா அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக் ஊரில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதன் காரணமாக 17 வயது மேஜராகாத பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் பர்கூர் போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ், காவ்யாவின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனை அறிந்த காவ்யா “தன்னால் தானே பெற்றோருக்கு இந்த நிலைமை” என மனமுடைந்து, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவ்யாவை மீட்ட அவரது கணவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளான குமார் மற்றும் கவிதா தம்பதியினர், முன் ஜாமீன் வாங்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, திருப்பத்தூர் அடுத்த மொளகரன்பட்டி பகுதியில் உள்ள ரயில் முன் நேருக்கு நேர் நின்றதில், ரயில் மோதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார்,சிதறிய உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பெண்ணின் காதலை ஏற்று 17 வயதில் திருமணம் செய்து வைத்து ‘குழந்தை திருமண வழக்கில்’ சிக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் கணவன் மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்