ஏன் பிரிந்தோம்? 'பையா' பட வில்லன் மிலிந்த் சோமனுடனான காதல் முறிவு பற்றி முதன்முறையாகப் பேசிய ஷஹானா!

அவர்களுக்கு இடையிலான 21 வயது வித்தியாசம் பெரும் விவாதமானது
 Milind Soman breakup
Published on
Updated on
2 min read

நடிகை ஷஹானா கோஸ்வாமி, தனது வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் பேட்டியில், மாடலும் நடிகருமான மிலிந்த் சோமனுடனான தனது காதல் பயணம் மற்றும் பிரிவு குறித்து அவர் மனம் திறந்துள்ளார். தனது 16 அல்லது 17 வயதில் மிலிந்த் சோமனைத் திரையில் பார்த்தது முதலே, அவரைத் தீவிரமாகப் பின்தொடரும் ரசிகையாக (stalker fan) இருந்ததாக ஷஹானா கூறியுள்ளார். அந்த வயதிலேயே மிலிந்த் சோமனின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பிய கதையை அவர் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். அந்தத் தொடக்கத்திற்குப் பிறகு, அவர்கள் ஆறு ஆண்டுகளாக நேரில் பேசிக்கொள்ளாமல் வெறும் குறுஞ்செய்திகள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

தங்களது ஆறு ஆண்டுகாலத் தொடர்புக்குப் பிறகு, இருவரும் மும்பையில் தற்செயலாகச் சில முறை சந்தித்துக் கொண்டனர். பிறகு, இருவரும் சிங்கிளாக இருந்த நேரத்தில், ஷஹானா மீண்டும் அவருக்கு மெசேஜ் செய்யத் தொடங்கியிருக்கிறார். அப்போதுதான் அவர்களது காதலும் தொடங்கியிருக்கிறது. மிலிந்த் சோமனுக்கு 43 வயதும், ஷஹானாவுக்கு 20 வயதுகளின் தொடக்கமும் இருந்த அந்தச் சமயத்தில், அவர்களுக்கு இடையிலான 21 வயது வித்தியாசம் பெரும் விவாதமானது. ஆனால், இதைப் பற்றிப் பேசிய ஷஹானா, தமக்கு அந்த வயது வித்தியாசம் ஒருபோதும் பெரிய விஷயமாகத் தெரிந்ததில்லை என்று கூறியுள்ளார். சிறு வயதிலிருந்தே தாம் முதிர்ச்சியுடன் இருந்ததாகவும், குடும்பத்தில் பெற்றோருடன் நட்புறவு இருந்ததால் எந்த விஷயத்தையும் ஒளிவுமறைவின்றிப் பேசும் சூழல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், 2013-ஆம் ஆண்டில் இந்தத் தம்பதி பிரிவதாக அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இது குறித்துப் பேசிய ஷஹானா, பிரிந்ததற்கு மிக முக்கியமான காரணம் நேரமும், வாழ்க்கை குறித்த அவர்களது பார்வைகளும் மாறுபட்டிருந்ததுதான் என்று கூறியுள்ளார். கடைசி வரை தாங்கள் காதலித்ததாகவும், ஆனால் உறவில் ஒருமித்த கருத்து இல்லாமல் போகும்போது அதிலிருந்து விலகிச் செல்வதே சிறந்தது என்று அவர் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். பாரம்பரியமான உறவு முறைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், காதலை விடத் தனிப்பட்ட சுதந்திரத்திற்கே தாம் அதிக முக்கியத்துவம் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்பு என்ற பெயரில் ஒருவரை மற்றொருவர் கட்டுப்படுத்தக் கூடாது என்பதுதான் ஷஹானாவின் கருத்து. ஒருவரைச் சுதந்திரமாக இருக்க விடுவதுதான் உண்மையான அன்பு என்று அவர் நம்புகிறார். மிலிந்த் சோமனுடனான உறவில் இருந்த இந்த அடிப்படை மாற்றமே, காலப்போக்கில் தாங்கள் பிரிவதற்கு ஒரு இயற்கை சார்ந்த முடிவாக அமைந்தது என்று அவர் கூறினார். இப்போதும் மிலிந்த் சோமன் மீது தமக்கு நிறைய அன்பு இருப்பதாகவும், ஆனால் உறவுமுறையில் இருவரும் எதிர்பார்க்கும் விஷயங்கள் வேறாக இருந்ததால் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com