

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் தற்போது புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தப் படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி எழுப்பிய கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் தாக்கல் செய்த மனுவில், தணிக்கை வாரியம் வேண்டுமென்றே படத்தின் சான்றிதழைத் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலில் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னதாகவும், அதன்படி மாற்றங்கள் செய்த பிறகும் தற்போது திடீரென ஒரு தனிநபர் அளித்த புகாரை முன்வைத்து படத்தை மறுசீராய்வு குழுவிற்கு (Review Committee) அனுப்பியுள்ளதாகத் தயாரிப்பு தரப்பு வாதிட்டது. இது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயல் என்றும், படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிவைத்து இத்தகைய முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்துச் சில முக்கியமான கருத்துகளைப் பதிவு செய்தார். ஒரு திரைப்படம் வெளியாவதற்குச் சில நாட்களே உள்ள நிலையில், இது போன்ற புகார்கள் வருவதும், அதன் மீது வாரியம் எடுக்கும் முடிவுகளும் ஏன் எல்லாமே 'அப்நார்மலாக' (Abnormal) இருக்கிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். சாதாரண நடைமுறைகளைத் தாண்டி ஏன் இந்த ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவு சிக்கல்கள் எழுகின்றன என்பதைத் தணிக்கை வாரியம் விளக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், இந்தப் படத்தை ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடக் கூடாதா என்றும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்களே, அதுவரை பொறுமையாக இருக்க முடியாதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த தயாரிப்பு தரப்பு வக்கீல், ஒரு படத்தின் ரிலீஸ் தேதி என்பது பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்படுவது என்றும், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தள்ளிப்போவது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்றும் விளக்கமளித்தார். குறிப்பாகப் பொங்கல் விடுமுறை காலத்தைக் கணக்கில் கொண்டே இந்தத் தேதி தேர்வு செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது தணிக்கை வாரியத்திற்கு வந்த அந்தப் புகார் மனுவின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்தப் புகாரில் என்ன சொல்லப்பட்டுள்ளது, அது படத்தின் ரிலீஸைத் தடுக்கும் அளவுக்கு வலிமையானதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. 'ஜனநாயகன்' படம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு வெளியாகும் முக்கியப் படம் என்பதால், அரசியல் காரணங்களுக்காக இது முடக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர். ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகுமா அல்லது ரிலீஸ் தள்ளிப்போகுமா என்பது இன்றைய இறுதி விசாரணையில் தெரியவரும். திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து முன்பதிவு பணிகளைத் தொடங்கக் காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.