"அந்த நடிகர் என் தங்கச்சிக்கு துரோகம் செஞ்சிட்டார்.. நம்ப வைத்து நாசம் பண்ணிட்டாரு" - புலம்பும் அண்ணன்

ஓம் புரி உயிருடன் இல்லாததால் தான் பழைய கசப்பான நினைவுகளைப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்...
seema om kapoor
seema om kapoor
Published on
Updated on
2 min read

பாலிவுட் திரையுலகில் மிகச்சிறந்த நடிகராகக் கருதப்பட்ட மறைந்த ஓம் புரி குறித்து, பிரபல நடிகர் அன்னு கபூர் பகிர்ந்துள்ள அதிரடியான தகவல்கள் தற்போது திரையுலகையே அதிர வைத்துள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அன்னு கபூர், ஓம் புரி ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதில் துளியும் சந்தேகமில்லை, ஆனால் ஒரு மனிதனாக அவர் தன் சகோதரி சீமா கபூரின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஓம் புரியும் சீமா கபூரும் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே, ஓம் புரி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து சீமா அதிர்ச்சியடைந்தார். இந்தத் துரோகத்தால் அவர்களது மணவாழ்க்கை பாதியிலேயே முறிந்தது.

ஓம் புரி ஒரு மகா கலைஞன் தான், ஆனால் அவர் ஒரு கணவராகத் தோற்றுவிட்டார் என்று அன்னு கபூர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். தனது சகோதரி கர்ப்பமாக இருந்தபோது அவருக்குத் துரோகம் செய்ததால்தான் அனைத்தும் தவறாகப் போனது என்றும், தான் அந்தப் பெண்ணின் சகோதரன் என்பதால் இதைச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓம் புரியின் கடைசி காலங்களில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது, சீமா கபூர் தான் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டதாகவும், பத்து ஆண்டுகளுக்கு முன்பே முடியாமல் போனவரைத் தனது சகோதரிதான் காப்பாற்றினார் என்றும் அவர் கூறியுள்ளார். தன் சகோதரி மீண்டும் அவருடன் சேர்ந்தது தனக்கு வருத்தத்தை அளித்தாலும், தற்போது ஓம் புரி உயிருடன் இல்லாததால் தான் பழைய கசப்பான நினைவுகளைப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சீமா கபூர் கடந்த ஆண்டு அளித்த ஒரு பேட்டியில், தான் மூன்று மாத கர்ப்பமாக இருந்தபோது ஓம் புரி செய்த துரோகத்தை விவரித்திருந்தார். 'சிட்டி ஆஃப் ஜாய்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, நந்திதா புரி என்ற பெண் பத்திரிகையாளருடன் ஓம் புரிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சீமாவின் நண்பர்களுக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் அதை ஒரு தற்காலிகமான விஷயம் என்று நினைத்து மறைத்துவிட்டனர். ஆனால் ஓம் புரி ஒருகட்டத்தில் சீமாவிடம் போன் செய்து, தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். கர்ப்பமாக இருந்த சீமா, எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்தாலும், ஓம் புரியின் குடிப்பழக்கமும் அந்தப் பெண்ணின் தொந்தரவும் எல்லை மீறிப்போனதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் அன்னு கபூர் மிகவும் ஆத்திரமடைந்து, ஓம் புரியை நீதிமன்றத்திற்கு இழுக்க முயன்றுள்ளார். அந்தச் சமயத்தில் தனது குழந்தையை இழந்த சீமா கபூருக்கு, ஓம் புரி தனது செயலாளர் மூலமாக 25 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். ஆறுதல் சொல்லக்கூட வராமல் வெறும் பணத்தை அனுப்பியதால் ஆத்திரமடைந்த சீமா, அதைத் திருப்பி அனுப்பியுள்ளார். இதை ஓம் புரியின் செயலாளர் 'தலைக்கனம்' என்று கிண்டல் செய்தாலும், அது தனது 'சுயமரியாதை' என்று சீமா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 1993-இல் நந்திதா புரியைத் திருமணம் செய்துகொண்ட ஓம் புரிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். 2017-இல் ஓம் புரி இறப்பதற்கு முன், சீமாவிடம் போனில் அழைத்துத் தனது தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com