

மளிகைப் பொருட்கள் வாங்கிய பிறகோ அல்லது உங்கள் வாகனத்தில் எரிபொருள் நிரப்பிய பிறகோ நீங்கள் பெறும் அந்தச் சிறிய காகிதத் துண்டு பாதிப்பில்லாததாகத் தோன்றலாம். ஆனால், மை பயன்படுத்தாத பளபளப்பான ரசீதுகளான வெப்பக் காகித ரசீதுகள், உங்களை மறைமுகமாகத் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுக்கு உள்ளாக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவில் உள்ள இலாப நோக்கற்ற கண்காணிப்பு அமைப்பான Center for Environmental Health (CEH), ரசீதுத் தாள்களில் (Bill paper) பிஸ்பெனால் எஸ் (BPS) அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 32 பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது . பிஸ்பெனால் எஸ் (BPS), என்பது பிஸ்பெனால் ஏ (BPA)வின் அதிகம் அறியப்படாத ஆனால் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் ஆகும். இந்த சில்லறை விற்பனையாளர்களில் தி சீஸ்கேக் ஃபேக்டரி, கிளேர்ஸ், சப்வே, ஃபாரெவர் 21 மற்றும் பர்கர் கிங் ஆகிய நிறுவனங்கள் அடங்கும் என்று கூறியுள்ளனர்.
BPAவைப் போலவே, BPSம் ஒரு ஹார்மோன் சீர்குலைக்கும் வேதிப்பொருள் ஆகும். இது வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட உடலின் இயல்பான செயல்பாடுகளைச் சீர்குலைக்கக் கூடியது என்று கூறுகின்றனர். ரசீதுத் தாள்களைக் கையாளும்போது, குறுகிய நேரத்திற்குள் BPS தோலின் வழியாக உடலுக்குள் உறிஞ்சப்படலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கலிபோர்னியாவில் இனப்பெருக்கப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்ட இரசாயனங்களின் பட்டியலில் BPS சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக, வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் இந்த இரசாயனம் இல்லை என்பதை உறுதி செய்வதற்கோ அல்லது BPS இருப்பதற்கான எச்சரிக்கையை அதில் சேர்ப்பதற்கோ ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. முன்னதாக, CEH நிறுவனம், முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ரசீது வழங்குநர்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அதன்படி, அவர்கள் தங்களின் ரசீது வெப்பத் தாளில் இருந்து BPAஐ அகற்ற வேண்டும் என அந்த அமைப்பு கோரியது. ஆனால் தற்போதுவரை எந்த ஒரு நிறுவனங்களும், வரையறுக்கப்பட்ட அல்லது அந்த ரசாயனத்தை நீக்குவது போன்ற எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது. BPSக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்க, முடிந்தவரை அச்சிடப்பட்ட ரசீதுகளை நுகர்வோர் நிராகரிக்க வேண்டும் என CEH பரிந்துரைக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்றும் பலர் கூறுகின்றனர்.
'ஒரு காகிதத் துண்டைத் தொடுவது மட்டுமே உங்களுக்கு உண்மையில் தீங்கு விளைவிக்குமா?' என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், உண்மைதான். குறிப்பாக அடிக்கடி தொடும்போது அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆய்வுகளின்படி, BPA ரசீதுகளில் இருந்து சருமத்திற்குப் பரவி, பின்னர் இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடும். மேலும், சமீபத்தில் நடத்திய ஆய்வில், தினமும் நூற்றுக்கணக்கான ரசீதுகளைக் கையாளும் காசாளர்கள் மற்றும் சில்லறை விற்பனைப் பணியாளர்களின் உடலில், அவற்றை அரிதாகத் தொடும் நபர்களைக் காட்டிலும் BPAயின் அளவு கணிசமாக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சில நாடுகள் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் வெப்பத் தாளில் BPA பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன
இதிலிருந்து பாதுகாக்க, "ரசீதுகளைக் கையாளக் கூடிய கடை ஊழியர்கள், முடிந்தால் கையுறைகளை அணிய வேண்டும். ரசீதுகளைக் கையாண்ட பிறகு, குறிப்பாகச் சாப்பிடுவதற்கு முன்பு, உங்கள் கைகளைக் கழுவ வேண்டும், ரசீதைக் கையாளுவதற்கு முன்பு ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன. ஏனெனில் அது BPS உறிஞ்சப்படுவதை கணிசமாக அதிகரிக்கக்கூடும்," என்று CEHன் நச்சு வெளிப்பாடுகள் மற்றும் மாசு தடுப்புத் திட்டத்தின் மூத்த இயக்குநர் ஷகூரா அசிமி-கெய்லன் கூறியிருக்கிறார். எனவே வாடிக்கையாளர்கள் மற்றும் இந்த ரசீதை கொண்டு வேலைசெய்வோர் கவனமுடன் இருக்குமாறு ஆய்வாளர்களால் எச்சரிக்கப்படுகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.