"நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் வாக்கு இன்று எத்தனை உண்மையாகிவிட்டது. ஒரு காலத்தில் தெருவுக்குத் தெரு ஓடிய ஆறுகளும், ஏரிகளும் இன்று காய்ந்து போய்விட்டன. நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. நாம் இப்போதே விழிப்புணர்வு அடையவில்லை என்றால், அடுத்த தலைமுறை தண்ணீருக்காகப் போர் புரிய வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரைச் சேமிப்பது என்பது ஏதோ ஒரு அரசாங்கத்தின் வேலை என்று நினைக்காமல், அது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும்.
வீடுகளில் தண்ணீரைச் சேமிக்கச் சிறிய மாற்றங்களைச் செய்தாலே போதும். குழாய்களில் கசிவு இருந்தால் உடனடியாகச் சரி செய்யுங்கள். ஒரு சொட்டுச் சொட்டாக வீணாகும் தண்ணீர் ஒரு நாளில் பல லிட்டர்களை இழக்கச் செய்யும். பல் துலக்கும் போதும், பாத்திரம் கழுவும் போதும் குழாயைத் திறந்து வைக்காமல் தேவையுள்ள போது மட்டும் திறக்கப் பழகுங்கள். குளிப்பதற்கு 'ஷவர்' பயன்படுத்துவதற்குப் பதிலாக வாலி மற்றும் மொண்டு பயன்படுத்துவது நீரை மிச்சப்படுத்தும். அதேபோல், காய்கறி மற்றும் அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றலாம்.
மிக முக்கியமாக, மழைநீர் சேமிப்பு (Rainwater Harvesting). மழைக்காலங்களில் நம் வீட்டின் கூரையில் விழும் தண்ணீர் வீணாகத் தெருவில் ஓடிச் சாக்கடையில் கலப்பதைத் தடுக்க வேண்டும். அந்த நீரை ஒரு குழாய் மூலம் நிலத்தடிக்குக் கொண்டு சென்றால், அது கிணறு மற்றும் போர்வெல் மட்டத்தை உயர்த்தும். கிராமப்புறங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பது விவசாயத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும். ஏரி, குளங்களைச் தூர்வாரிப் பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதும், அதில் கழிவுகளைக் கொட்டுவதும் மிகப்பெரிய பாவம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
தண்ணீர் சிக்கனம் என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்தது. குழந்தைகளுக்குத் தண்ணீரின் மகத்துவத்தைச் சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். காடுகளில் மரங்களை வளர்ப்பது மழைப்பொழிவை அதிகரிக்கும் என்பதால், முடிந்தவரை மரங்களை நட வேண்டும். தண்ணீர் இல்லையென்றால் உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. நாம் இன்று சேமிக்கும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும். தண்ணீரை வீணாக்காமல் இருப்போம், உலகைக் காப்போம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.