இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள கொலோசியம், உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான திறந்தவெளி அரங்கம் ஆகும். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இது, பண்டைய ரோமானிய மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் 'பிளேவியன் ஆம்பிதியேட்டர்' என்று அழைக்கப்பட்ட இது, இதைக் கட்டிய பிளேவியன் வம்ச மன்னர்களின் பெயரால் அழைக்கப்பட்டது. இதன் அருகே இருந்த நீரோ மன்னரின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலை காரணமாகவே இதற்கு 'கொலோசியம்' என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. பலரும் நினைப்பது போல, ஜூலியஸ் சீசர் இந்த அரங்கத்தைப் பார்த்ததில்லை; ஏனெனில், கொலோசியம் கட்டி முடிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.
கி.பி. 72-ல் தொடங்கி 80-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான கட்டுமானத்தில் ரோமானியர்களின் இன்ஜினியரிங் அறிவு பிரமிக்க வைக்கிறது. சுண்ணாம்புக்கல், எரிமலைப் பாறைகள் மற்றும் கான்கிரீட் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட இந்த அரங்கம், 189 மீட்டர் நீளமும் 156 மீட்டர் அகலமும் கொண்டது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நீரோ மன்னர் தனது சொந்த மகிழ்ச்சிக்காக வைத்திருந்த ஏரியை வடிய வைத்து, பொதுமக்களுக்காக இந்த இடத்தை மாற்றிக் கொடுத்தனர். அந்த காலத்தில் 50,000 முதல் 80,000 பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் கட்டப்பட்ட இந்த அரங்கம், ரோமானிய பேரரசர்களின் செல்வாக்கை நிலைநாட்டும் ஒரு கருவியாகச் செயல்பட்டது.
இந்த அரங்கத்திற்குள் என்ன நடந்தது என்பது வரலாற்றில் ஒரு மர்மமான பக்கம். வீரர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து வாள் மற்றும் கேடயங்களுடன் மோதிக்கொள்ளும் கிளாடியேட்டர் சண்டைகள் இங்குதான் நடந்தன. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்கம், புலி, யானை மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் இங்குள்ள மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டன. சில வரலாற்றாசிரியர்கள், இந்த அரங்கத்தை நீரால் நிரப்பி போர்க்கப்பல் சண்டைகள் நடத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, இந்த அரங்கம் தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. கி.பி. 1349-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் இதன் பெரும் பகுதியைச் சேதப்படுத்தியது.
காலப்போக்கில், இதன் கற்களை எடுத்து தேவாலயங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப் பயன்படுத்தினர். இடைக்காலத்தில் இது கல்லறைத் தோட்டமாகவும், வீடுகளாகவும் மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் இதை கம்பளி தொழிற்சாலையாக மாற்றவும் முயற்சி நடந்தது. இத்தனை அழிவுகளைத் தாண்டி இன்றும் கம்பீரமாக நிற்கும் கொலோசியம், அதன் இன்ஜினியரிங் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக உலகின் 'புதிய ஏழு அதிசயங்களில்' ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நவீன கால மைதானங்களின் வடிவமைப்பிற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. இன்றும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த இடம், ரோமானியர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.