இன்சூரன்ஸ் கம்பெனிகள் 'ஓகே' சொன்னாலும் கப்பல்கள் ஏன் நகரவில்லை? கடலில் மையம் கொண்டுள்ள கண்ணுக்குத் தெரியாத அந்த பயம்!

உயிர்பலி மற்றும் சொத்து இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பல நிறுவனங்கள் தங்கள் பயணங்களைத் தள்ளிப்போட்டு வருகின்றன...
இன்சூரன்ஸ் கம்பெனிகள் 'ஓகே' சொன்னாலும் கப்பல்கள் ஏன் நகரவில்லை? கடலில் மையம் கொண்டுள்ள கண்ணுக்குத் தெரியாத அந்த பயம்!
Published on
Updated on
2 min read

மத்திய கிழக்கில் நடக்கும் போரினால் உலகளாவிய வர்த்தகம் ஸ்தம்பித்துக் கிடக்கும் நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுவாக, இதுபோன்ற பதற்றமான காலங்களில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பாதுகாப்பை (Coverage) ரத்து செய்ததால்தான் கப்பல்கள் ஓடவில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், உண்மையில் கப்பல் போக்குவரத்து முடங்கியதற்குக் காரணம் இன்சூரன்ஸ் இல்லாதது அல்ல, மாறாக கடல் வழித்தடங்களில் நிலவும் "மரண பயம்" தான் என்று இன்சூரன்ஸ் நிபுணர்கள் (Underwriters) அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச காப்பீட்டு சங்கத்தின் (IUA) தலைமை நிர்வாகி கிறிஸ் ஜோன்ஸ் இது குறித்துப் பேசுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடக்கும் வர்த்தகம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது. இதற்கு இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை என்பது காரணம் கிடையாது. அங்கு நிலவும் வெளிப்படையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்தான் காரணம்" என்று விளக்கியுள்ளார். அதாவது, இன்சூரன்ஸ் கம்பெனிகள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தயாராக இருந்தாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர்ச் சூழலில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்தினால் கப்பல் உரிமையாளர்களே தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரின் தாக்கம் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த புதன்கிழமை அன்று ஈராக் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ராட்சத எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான 'சேஃப்சீ விஷ்ணு' (Safesea Vishnu) மற்றும் கிரேக்க நிறுவனத்திற்குச் சொந்தமான 'செஃபிரோஸ்' (Zefyros) ஆகிய இரண்டு கப்பல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் கப்பல் போக்குவரத்து உலகையே உலுக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி இப்போது ஈராக் கடல் எல்லை வரை தாக்குதல் பரவியிருப்பது கப்பல் நிறுவனங்களை மிரளச் செய்துள்ளது.

இன்சூரன்ஸ் சந்தையைப் பொறுத்தவரை, போர் அபாயக் காப்பீடு (War-risk insurance) என்பது இப்போது மிகக் கடினமான ஒன்றாக மாறியுள்ளது. கப்பல் ஒன்று போர் நடக்கும் பகுதி வழியாகச் செல்ல வேண்டும் என்றால், அதன் மதிப்பில் சுமார் 1% முதல் 1.5% வரை பிரிமியம் தொகையாகக் கேட்கப்படுகிறது. உதாரணமாக, 100 மில்லியன் டாலர் (சுமார் 850 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஒரு எண்ணெய் கப்பல் ஒருமுறை இந்தப் பாதையைக் கடக்க வேண்டும் என்றால், அதற்கு மட்டும் கிட்டத்தட்ட 8.5 கோடி ரூபாய் முதல் 13 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு அதிகப் பணம் செலுத்தத் தயாராக இருந்தாலும், உயிர்பலி மற்றும் சொத்து இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பல நிறுவனங்கள் தங்கள் பயணங்களைத் தள்ளிப்போட்டு வருகின்றன.

இந்தச் சூழலைச் சமாளிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கடற்படைப் பாதுகாப்பை (Naval Escorts) கப்பல் நிறுவனங்கள் கோரியுள்ளன. ஆனால், நிலைமை இன்னும் கைகூடவில்லை. ஒரு சில கப்பல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவே குறைந்தது 8 முதல் 10 போர்க்கப்பல்கள் தேவைப்படும் என்று 'லாய்ட்ஸ் லிஸ்ட்' (Lloyd’s List) அறிக்கை கூறுகிறது. தற்போது நிலவும் இந்தத் நிச்சயமற்ற தன்மையால், சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் வருகிறது. எனவே, கப்பல்கள் நடுக்கடலில் முடங்கிக் கிடப்பது இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியாவது தங்கள் எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

வர்த்தகம் என்பது பணத்தைச் சார்ந்தது மட்டுமல்ல, அது மனித உயிர்களையும் பாதுகாப்பையும் சார்ந்தது என்பதை இந்தப் போர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் "நாங்கள் கவரேஜ் கொடுக்கத் தயார்" என்று சொன்னாலும், "எங்கள் உயிரும் கப்பலும் முக்கியம்" என்று நிறுவனங்கள் ஒதுங்கி நிற்பது உலகப் பொருளாதாரத்தை ஒரு முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்தப் பதற்றம் தணியாத வரை, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் (Supply Chain) ஏற்பட்டுள்ள இந்த முடக்கம் நீடிக்கவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com