

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP), GASA , INTERPOL( international criminal police organization ), உலக வங்கி, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு போன்ற அமைப்புகளின் ஆராய்ச்சியின் படி, டிஜிட்டல் மோசடிகள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் மிகவும் தீவிரமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது என தெரிவிக்கிறது. GASA (Global Anti-Scam Alliance) வெளியிட்ட "State of Scams in India Report 2025" அறிக்கையின்படி, இந்தியாவில் 75% பெரியவர்கள் ஏதேனும் ஒரு வகையான மோசடி முயற்சியை எதிர்கொண்டுள்ளனர். 2024-ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் நுகர்வோர் சுமார் $1 டிரில்லியன் (1 லட்சம் கோடி டாலர்) தொகையை மோசடிகளால் இழந்துள்ளதாக GASA தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளால், உலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இழப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர், சில மதிப்பீடுகள் மொத்த இழப்புகளை ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு அருகில் கொண்டு செல்கின்றன. இந்த அறிவிப்பின் படி, உலகெங்கிலும் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், ஏதோ ஒரு வகையான மோசடியை ஒரு முறையாவது எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் மோசடிகள் பெரும்பாலும் சிக்கலான ஹேக் செய்யும் முறைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை ஏமாற்றும் நடைமுறைகளையும், உளவியல் ரீதியான குழப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணத்தை மாற்றச் செய்வது அல்லது தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்த முயல்வது போன்ற செயல்கள். இவர்கள் பெரும்பாலும் வங்கிகள், அரசு நிறுவனங்கள், தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் அல்லது நிறுவன மேலாளர்கள் போன்ற நம்பகமான அமைப்புகளாக பேசி மக்களை நம்ப வைக்கிறார்கள். வங்கிக் கணக்கில் அவசர பிரச்சனை உள்ளது என்று எச்சரிக்கும் செய்திகளை அனுப்பவும் அல்லது போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் விரைவாக அதிக லாபம் பெறலாம் எனவும் கூறி மக்களை கவர முயற்சிக்கிறார்கள். இன்னும் சிலர் ஒருபோதும் கிடைக்காத மலிவான பொருட்கள் விற்பதாக கூறி, போலியான ஆன்லைன் கடைகளை உருவாக்கி மக்களை மோசடி செய்கிறார்கள்.
தற்போதுள்ள நவீன சூழலில் போலி வலைத்தளங்கள், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை எளிதாகவும், விரைவாகவும் உருவாக்க முடியும். இதன் விளைவாக, ஒரு காலத்தில் பெரிய குற்றவியல் வலைப்பின்னல்கள் தேவைப்படும் மோசடிகளை இப்போது மேம்பட்ட டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி சிறிய குழுக்களால் மேற்கொள்ள முடிகிறது. மேலும் ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, டிஜிட்டல் சேமிப்பு மற்றும் முதலீடு போன்ற அம்சங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் தான் அதனை பயன்படுத்தி டிஜிட்டல் மோசடிகளும் நடைபெறுகிறது. இதனால் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மை வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும் இந்த டிஜிட்டல் மோசடி ஒரு படி மேலே சென்று, காதல் எனும் பெயரிலும் குற்றங்கள் பதிவாகிறது. குற்றவாளிகள் பணம் கேட்பதற்கு முன்பு சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் செயலிகள் மூலம் உணர்ச்சிபூர்வமான உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள் அதன் பின் பணம் மோசடி எளிதாக நடைபெறுகிறது.
வேலை தேடுபவர்களை குறிவைத்து, அதிக ஊதியம் தரும் வாய்ப்புகளை உறுதியளித்து, அங்கேயும் மோசடிகள் அரங்கேறுகிறது. அவை போலியானவை என்று ஆராயாமல் ஒரு அவசரத்தில் செயல்படுபவர்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அதேபோல் ஆன்லைன் கல்வி கற்கும் முறையை பயன்படுத்தி பல பண மோசடிகள் நடக்கிறது. முதலில் இலவசம் அல்லது சேவை எனும் பெயரில் தொடங்கப்படும் சில ஆன்லைன் வகுப்புகள் பின்னர் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி பண மோசடியில் சிக்க வைக்கிறது. இது பாதிக்கப்படுபவர்களை விரைவாக செயல்பட அவர்களின் அழுத்தம் மற்றும் அவசரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
டிஜிட்டல் கல்வியறிவு குறைவாக இருப்பதால், மோசடி முயற்சிகளை மக்கள் அடையாளம் காண்பது கடினமாகிவிடும். கல்வியும் தீர்வின் ஒரு முக்கிய பகுதியாகும். பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு திட்டங்கள் மக்கள் பொதுவான மோசடி தந்திரங்களை அடையாளம் காணவும் ஆன்லைனில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவும். மோசடிகளை எதிர்த்து போராடவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை கண்டறிந்து, மோசடி வலைத்தளங்களை அடையாளம் கண்டு, பணத்தை இழக்கும் முன் தீங்கு விளைவிக்கும் பரிவர்த்தனைகளை நிறுத்தவும் முடியும். மேலும் அவசர டிஜிட்டல் முடிவுகளை குறைக்க வேண்டும், பதட்டத்தில் சரியான முடிவை மேற்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும். ஒரு முறை தரவுகளை சரிபார்த்து முடிவெடுக்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்