400 கிலோ ஆர்டிஎக்ஸ்.. 1 கோடி மக்களின் உயிர் இலக்கு - மும்பையை பதற வைத்த வாட்ஸ்அப் மிரட்டல்!

பத்து நாட்கள் நடைபெறும் கணபதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஆனந்த் சதுர்த்தி ஊர்வலம் ...
mumbai
mumbai
Published on
Updated on
1 min read

நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில், விநாயகர் சதுர்த்தி திருவிழா நிறைவு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, வாட்ஸ்அப் வழியாகக் காவல்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் செய்தி, மும்பை முழுவதும் பெரும் கலக்கத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பத்து நாட்கள் நடைபெறும் கணபதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஆனந்த் சதுர்த்தி ஊர்வலம் நாளை (செப்.6) நடைபெற உள்ளது. இதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் மும்பை வீதிகளில் திரள்வார்கள் என்பதால், ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், மும்பை போக்குவரத்துப் காவல்துறையின் வாட்ஸ்அப் உதவி எண்ணுக்கு நேற்று ஒரு மிரட்டல் செய்தி வந்துள்ளது.

அதை அனுப்பியவர் தன்னை "லஷ்கர்-இ-ஜிஹாதி" என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காட்டியுள்ளார். அந்த செய்தியில், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாகவும், நகரின் பல்வேறு பகுதிகளில் 34 வாகனங்களில் 'மனித வெடிகுண்டுகள்' பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு சுமார் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிபொருள் பயன்படுத்தப்படும் என்றும், இது "ஒரு கோடி மக்களைக் கொல்லும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் செய்தியையடுத்து, மும்பை காவல்துறை உடனடியாக உஷார் நிலைக்கு வந்துள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த மிரட்டலை நாங்கள் எல்லா கோணத்திலும் விசாரித்து வருகிறோம். மேலும், மாநில பயங்கரவாத தடுப்புப் படைக்கும் (ATS) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரி, "எங்கள் பாதுகாப்புப் படைகளால் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க முடியும். நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். வாகன நிறுத்துமிடங்கள் முதல், கட்டிடங்களின் கீழ்தளம் வரை எதையும் நாங்கள் சும்மா விடவில்லை. ஒவ்வொரு இடமும் தீவிரமாகச் சோதனையிடப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

காவல்துறையின் உளவுத்துறையும், குற்றப் பிரிவும் இணைந்து இந்த வாட்ஸ்அப் செய்தியின் பின்னணியில் உள்ள நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த மிரட்டல் வெறும் வதந்தியா அல்லது உண்மை அச்சுறுத்தலா என்பதை உறுதிப்படுத்த, முழு வீச்சில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும், பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய நபர்களையோ அல்லது பொருட்களைக் கண்டாலோ உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. நாளை நடைபெறும் கணபதி சிலை கரைப்பு விழாவிற்கு வருபவர்களின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை உறுதியளித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com