டெல்லி குண்டுவெடிப்பு..! தோல்வி அடைந்ததா உளவுத்துறை!? “20 மணி நேரம் ஆகியும் ஏன் அந்த வார்த்தைய சொல்லல..?

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியாவில் ஏதேனும் தீவிர வாத நடவடிக்கை நடந்து அதற்கு பாகிஸ்தான் பின்புலம் இருந்தால்...
delhi bomb blast
delhi bomb blast
Published on
Updated on
3 min read

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹூண்டாய் i20 கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்தவர்களை மீட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 24 பேர் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

சரியாக நேற்று மாலை 6.50 மணியளவில் மெட்ரோ நிலையத்தில் கார் வெடித்து விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி போலீசார், சிறப்பு புலனாய்வு போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.முதற் கட்டமாக வெடித்து சிதறிய காரின் உரிமையாளரான குர்கானை சேர்ந்த சல்மான் என்பவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இந்த கார் தற்போது இரண்டு நபர்களிடம் கைமாறியதாக அறியப்பட்ட நிலையில் தற்போதைய கார் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னல் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். மேலும் வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வெடி விபத்திற்கான காரணங்களை பற்றி தொடர்ந்து போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிவிபத்து காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதலில் ஹூண்டாய் கார் வெடித்த நிலையில் அருகிலிருந்து மேலும் சில வாகனகள் வெடித்து சிதறியதால் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்காரின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கார் வெடித்த போது அதை இயக்கிய நபர் குறித்து கண்டறிந்துள்ளனர். காரை இயக்கியவர் ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர். நேற்று ஹரியானாவில் உள்ள பரிதாபத்தில் வெடிமருந்து வைத்திருந்தவர்கள் இவரது கூட்டாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தீவிரவாத தொடர்பில் கைது செய்யப்பட்ட புல்வாமா மருத்துவர்களுடன் முகமது உமர் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவந்துள்ளது.

எனவே தற்கொலை படையால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பரிதாபத்தில் கூட்டாளிகளை கைது செய்த ஆத்திரத்தில் முகமது உமர் இவ்வாறு செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிமருந்து வைத்திருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றொரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தொடர்ந்து (அக் 19) ஆம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகள் எச்சரிக்கை என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவர் முகமது உமரின் தாய் மற்றும் தங்கையை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலில் வேறு யாருக்காவது தொடர்புள்ளது என்பது பற்றியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் மூன்று மணி நேரம் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த கார் சரியாக 6.48 மணியளவில் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில் வெடித்துள்ளது.

எனேவ இது திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதலா என்ற சந்தேகம் ஏற்பட்டடுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த வெடிவிபத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில்  தீவிர சோதனை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காரை முகமது உமர் இயக்கி செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 மணி நேரம் மேலாகி விட்டது, ஆனாலும் இது தீவிரவாத தாக்குதல் தான் என அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த, மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், இது உளவுத்துறை தோல்விதான். ஆனாலும் அவர்களும் மனிதர்கள் தானே. சில சமயங்களில் இதுபோன்ற சம்பவங்கள் கைமீறி நடந்துவிடும். ஆனால் கடந்த காலங்களோடு இந்த விவகாரத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 2005 முதல் 2008 வரையிலான காலத்தில் இந்தியாவில் அதிகளவு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அதன்பிறகு நாட்டுக்குள் நடந்த மிகப்பெரும் தாக்குதல் இது. மோடி அரசுக்கு அவமானம் தான். ஏனெனில் எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை புரிந்து கொள்ளலாம், ஆனால் தலைநகரிலே இதுபோன்று தாக்குதல் நடத்துவதை எப்படி ஏற்க முடியும். ஆனாலும் நாட்டில் இதுபோன்று சம்பவங்கள் நடந்தால், இது தீவிரவாத தாக்குதலா? அல்லது வெடிபொருட்கள் வெடித்து சிதறியதா? என்று உடனே சொல்லிவிடுவார்கள். ஆனால் கிட்டத்தட்ட 18 மணி நேரத்துக்கு மேலாகியும் இது  யார் நடத்தியது என்று கூறுவதில் அரசுக்கு என்ன தயக்கம் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் பிரதமர் “நாசக்காரர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர்” என சொல்லியுள்ளார் அதன் மூலம் இது கிட்டட்தட்ட தீவிரவாத தாக்குதல் என புரிந்துகொள்ளலாம். ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியாவில் ஏதேனும் தீவிரவாத நடவடிக்கை நடந்து அதற்கு பாகிஸ்தான் பின்புலம் இருந்தால் “அது போர் நடவடிக்கையாக கருதப்படும், நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என அங்குள்ள உயர்மட்ட தலைமை பேசியிருந்தது. ஆனால் தற்போது எதற்கு மௌனம் காக்க வேண்டும். மேலும், இன்று பூட்டான் கிளம்பி போயுள்ளார். இதுபோன்று இக்கட்டான சூழலில் முதல்வர் வெளிநாடு செல்வது நிச்சயம் அரசியலாக்கப்படும். ஆனால் அதைவிட சிக்கலான விஷயம் நீங்கள் ஏன்  அமைதியாக இருக்கிறீர்கள்? “ என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com