

நீட் இளநிலை தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், டெல்லியில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், நாட்டின் நலன் மற்றும் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சில மோசடி கும்பல்களின் செயலால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அண்மைய நாட்களில் நடந்த சில சம்பவங்கள் தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாகவும், மாணவர்களை தவறான பாதையில் வழிநடத்தும் முயற்சிகள் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் எந்த அவமான உணர்வும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாஜக அமைச்சர்களுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களது முக்கிய கோரிக்கை நிறைவேறியுள்ளதாகக் கூறிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நடைபெற்று வந்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவதாக அறிவித்தது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அனைவரும் அமைதியாக வீடு திரும்புமாறும் கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.