படித்து முடித்தும் வேலையில்லை! 5 லட்சம் சம்பளம் வெறும் கனவா? 90% இளைஞர்கள் எடுத்த முடிவு!

மனிதர்களுக்குப் பதிலாகப் பல வேலைகளை ஏஐ மூலம் செய்யத் தொடங்கிவிட்டன
job seekers in india
Published on
Updated on
2 min read

இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறி வருவதை ஒரு புதிய ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, இளங்கலை பட்டம் முடித்த சுமார் 73 சதவீத மாணவர்கள் தங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நிதர்சனத்தில் வெறும் 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அந்த அளவிலான சம்பளம் கிடைப்பதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய இடைவெளி, இளைஞர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளின்படி, பெரும்பாலான ஃப்ரெஷர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யத் தயாராகிவிட்டனர். சுமார் 90 சதவீத மாணவர்கள், தாங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த வருமானத்தில் வேலை செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளனர். இது தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் கடும் போட்டியைப் பிரதிபலிக்கிறது. வெறும் வேலைக்காக மட்டும் போராடாமல், ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிறுவனங்கள் இப்போது மனிதர்களுக்குப் பதிலாகப் பல வேலைகளை ஏஐ மூலம் செய்யத் தொடங்கிவிட்டன. இதனால் ஆரம்பக் கட்ட வேலைகளில் ஆட்களைச் சேர்ப்பது கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பெல்லாம் ஐடி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை வேலைக்கு எடுப்பார்கள், ஆனால் இப்போது நிறுவனங்களின் தேர்வு முறை மிகவும் கடினமாகிவிட்டது. திறமை அதிகம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

மேலும், நிறுவனங்கள் இப்போது வெறும் பட்டப்படிப்பை மட்டும் பார்ப்பதில்லை. மாணவர்களிடம் இருக்கும் கூடுதல் திறன்கள் மற்றும் அவர்கள் தொழில்நுட்பத்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதையே முக்கியமாகப் பார்க்கின்றனர். இதனால் சாதாரணக் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. 5 லட்சம் ரூபாய் பேக்கேஜ் என்பது ஐடி துறையில் மிகச் சாதாரணமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இப்போது அதுவே ஒரு சவாலான இலக்காக மாறியிருப்பது கசப்பான உண்மை.

கல்லூரி வளாக நேர்காணல்களும் முன்பைப் போல சுறுசுறுப்பாக நடப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்கள் ஆட்சேர்ப்புப் பணிகளைக் குறைத்துக் கொண்டுள்ளன அல்லது நிறுத்தி வைத்துள்ளன. இதனால் படிப்பை முடித்த கையோடு வேலைக்குச் செல்லலாம் என்று கனவு காணும் மாணவர்களுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. இந்தச் சூழலைச் சமாளிக்க மாணவர்கள் தங்களை நவீனத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com