ஃபெராரி, ஆடி நிறுவனங்களையே ஓரங்கட்டிய ராயல் என்பீல்டு: உலகின் மூன்றாவது வலிமையான பிராண்டாக உருவெடுத்து சாதனை!

நிறுவனத்தின் தெளிவான தயாரிப்பு உத்திகளே இந்த வெற்றிக்கு அடிப்படை என்று கூறப்படுகிறது.
Royal Enfield
Royal Enfield
Published on
Updated on
2 min read

சமீபத்தில் வெளியான 'பிராண்ட் பைனான்ஸ் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி 2026' அறிக்கையின்படி, உலகின் மூன்றாவது வலிமையான வாகன பிராண்டாக இந்தியாவின் ராயல் என்பீல்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல உலகளாவிய ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த இடத்தைப் பிடித்துள்ள ராயல் என்பீல்டு, தற்போது டொயோட்டா மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆடி நிறுவனம் நான்காவது இடத்தையும், உலகப்புகழ் பெற்ற ஃபெராரி நிறுவனம் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு 100-க்கு 88.9 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அந்த நிறுவனத்திற்கு 'AAA' ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது, இது உலகளாவிய இருசக்கர வாகன சந்தையில் அந்த பிராண்டிற்கு இருக்கும் செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது. நிறுவனத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு ஒரே ஆண்டில் 30 சதவீதம் உயர்ந்து 1.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் வெறும் பழைய பாணி மோட்டார் சைக்கிள்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனமாகப் பார்க்கப்பட்ட ராயல் என்பீல்டு, தற்போது உலக அளவில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு அதன் சர்வதேச விரிவாக்கம் மிக முக்கியக் காரணமாகும். தற்போது 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், உலகம் முழுவதும் 3,200-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களைக் கொண்டுள்ளது. மேலும், ஏழு சர்வதேச அசெம்பிளி ஆலைகளைக் கொண்டுள்ளதால், உலக சந்தைகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்குத் தேவை அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தெளிவான தயாரிப்பு உத்திகளே இந்த வெற்றிக்கு அடிப்படை என்று கூறப்படுகிறது. எளிமையான எஞ்சின் மற்றும் கிளாசிக் ஸ்டைல் என்ற தனது தனித்துவத்தை மாற்றாமல், காலத்திற்கு ஏற்ப ஹண்டர் 350 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 போன்ற மாடல்களை அறிமுகப்படுத்தியது வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதேபோல், புதிய இமாலயன் 450 மாடல் அட்வென்ச்சர் பைக் பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது அந்த பிராண்டின் மதிப்பை இளைஞர்களிடமும் கொண்டு சேர்த்துள்ளது.

இந்த உலகளாவிய பட்டியலில் ராயல் என்பீல்டு தவிர, மற்ற இந்திய நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மற்றும் மாருதி சுசூகி ஆகியவையும் இடம் பிடித்துள்ளன. உலகின் வலிமையான வாகன பிராண்டுகள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் 25-வது இடத்தையும், மாருதி சுசூகி 34-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் உலக அரங்கில் ஜெர்மனி மற்றும் இத்தாலிய நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து வருவது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com