

மதம் மாறிய கிறிஸ்தவர் ஒருவர் பட்டியல் சாதி அந்தஸ்தைக் கோரவோ, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தவோ முடியாது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுகிற ஒருவர் பட்டியல் சாதியினராக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. நீதிபதி பி.கே. மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வேறு எந்த மதத்திற்கு ஒருவர் மாறினாலும் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்று கூறியது. 1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு ஆணை இதைத் தெளிவுபடுத்துவதாக அவர் கூறினார்.1950 ஆம் ஆண்டு ஆணையின் 3ம் பிரிவில் குறிப்பிடப்படாத எந்தவொரு மதத்திற்கும் மாறுவதும், மாறிய அந்த நபரின் பிறப்பைப் பொருட்படுத்தாமல், பட்டியல் சாதி அந்தஸ்தை உடனடியாக இழக்க வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அரசியலமைப்பின் கீழோ அல்லது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட வேறு எந்தச் சட்டத்தின் கீழோ பட்டியல் சாதியினருக்குக் கிடைக்கக்கூடிய எந்தவொரு சட்டப்பூர்வமான பலன், பாதுகாப்பு, இட ஒதுக்கீடு அல்லது உரிமையையும் அத்தகைய நபர்கள் கோர முடியாது என்று அது மேலும் கூறியது.
இந்த வழக்கின் பின்னணியானது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, போதகராகவும் பணியாற்றி வந்த ஒருவர், தன்னைத் சில நபர்கள் தாக்கியதாகவும், அந்த நபர்களுக்கு எதிராக பட்டியல் சாதி, பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்த சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவர் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரினார். ஆனால், அந்தப் போதகர் மதம் மாறி, கிறிஸ்தவ மதத்தை தீவிரமாகப் பின்பற்றி வருவதால், அந்தக் கோரிக்கை சட்டப்படி செல்லாது என்று குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதை எதிர்த்து வாதிட்டனர். 2025 ஏப்ரல் 30 தேதியிட்ட ஓர் உத்தரவில், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், சாதி அமைப்பு கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்றும், அதன் விளைவாக பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற நீதிபதி ஹரினாத் என், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு புகார்தாரர், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்திருந்தார். இதற்கு எதிராக, அந்த மத போதகர் ஒரு சிறப்பு விடுப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பின்வருமாறு தீர்ப்பளித்தது: " இந்த வழக்கில், மனுதாரர் கிறிஸ்தவத்திலிருந்து தனது முந்தைய மதத்திற்கு மீண்டும் மதம் மாறியதாகவோ அல்லது மடிகா சமூகத்தில் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ வாதிடவில்லை. மாறாக, மேல்முறையீட்டாளர் தொடர்ந்து கிறிஸ்தவத்தைப் பின்பற்றி வந்ததாகவும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கிராமத்தில் உள்ள வீடுகளில் தவறாமல் ஞாயிறு பிரார்த்தனைகளை நடத்தி, ஒரு போதகராகச் செயல்பட்டு வந்ததாகவும் சான்றுகள் நிறுவுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் நடந்த நேரத்தில், அவர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒருசேர நிகழும் உண்மைகள், சம்பவம் நடந்த தேதியில் அவர் தொடர்ந்து ஒரு கிறிஸ்தவராகவே இருந்தார் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை என்று கூறியுள்ளது.
வழக்கின் பின்னணி:
பிட்டலவனிபாலம் கிராமத்தில் ஞாயிறு தொழுகைகளை நடத்தி வந்த போதகராக இருந்தவர்தான் புகார்தாரர். மனுதாரரால் தான் பலமுறை தாக்கப்பட்டதாகவும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மீண்டும் மீண்டும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும், மேலும் சாதியின் பெயரால் நிந்திக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அவர் மனுதாரருக்கு எதிராக ஒரு வழக்குப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில்தான் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சாதி அமைப்பு கிறிஸ்தவ மதத்திற்கு அந்நியமானது என்றும், எனவே அந்த மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்த முடியாது என்றும் தீர்ப்பளித்தது. ஒரு சாதிச் சான்றிதழை வைத்திருப்பது அல்லது அதை ரத்து செய்யாமல் இருப்பது மட்டுமே, மதம் மாறிய பிறகு பட்டியல் சாதியினருக்கான பலன்களைப் பெற ஒருவருக்கு உரிமை அளிக்காது என்றும், இதுபோன்ற பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் தகுந்த அதிகாரியே கையாள வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.