வாகனங்கள் ஆல்கஹாலில் இயங்குமா? மத்திய அரசு கொண்டுவரவுள்ள எரிபொருள் வரைவு அறிக்கை!

இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும், உள்நாட்டு எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்தும் முயற்சி
vehicles run on alcohol
Published on
Updated on
2 min read

இந்தியாவில் 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலவையான E85 எரிபொருளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. இதற்கான வரைவு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் E20 எரிபொருளை விட அதிக அளவில் எத்தனால் கலவையைக் கொண்ட E85, தனித்துவமான எரிபொருளாக இருக்கும் என்பதால், இதைப் பயன்படுத்துவதற்கு சிறப்பு வகை வாகன எஞ்சின்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்ததன்படி, E85 எரிபொருளுக்கான வரைவு அறிவிக்கை தயாராக உள்ளதுடன், அதை வெளியிடுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அரசு மட்டுமின்றி, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் எரிசக்தி துறை உள்ளிட்ட சந்தை தரப்பிலும் இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், E85 பயன்படுத்தும் வாகனங்களுக்கான ஆரம்பகட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் புதிதாக உருவானதல்ல. 2016ஆம் ஆண்டிலேயே E85 எரிபொருளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீப காலங்களில் மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக உலகளவில் ஏற்பட்ட எண்ணெய் விநியோக சிக்கல்கள் காரணமாக, இந்த திட்டம் மீண்டும் முன்னுரிமை பெற்றுள்ளது. இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும், உள்நாட்டு எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்தும் முயற்சியிலும் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் E85 எரிபொருள் நாட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது.

எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பிற தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உயிரிச் சார்ந்த எரிபொருளாகும். இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பெட்ரோலை ஒப்பிடுகையில் எத்தனால் தூய்மையாக எரிகிறது. இதன் தயாரிப்பு செயல்முறையில், தாவர அடிப்படையிலான சர்க்கரை மற்றும் மாவுச்சத்துக்கள் ஈஸ்ட் மூலம் நொதிக்க வைக்கப்பட்டு ஆல்கஹால் உருவாக்கப்படுகிறது. பின்னர் அந்த ஆல்கஹாலை சுத்திகரித்து, அதிக சதவீதத் தூய்மைக்கு கொண்டு வந்து எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இந்திய அரசு, 2050ஆம் ஆண்டுக்குள் ‘நிகர பூஜ்ஜியம்’ (Net Zero) கார்பன் வெளியீடு இலக்கை அடைவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமான எரிபொருள்களிலும் எத்தனால் கலவை பயன்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தற்போதைய நிலையில், நாட்டில் எத்தனால் உற்பத்தி அதிகரித்துள்ளதால், இதுபோன்ற எரிபொருள் மாற்றங்களுக்கு தேவையான கையிருப்பும் போதுமானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த எரிபொருள் அறிமுகம், இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுவதோடு, மறுபுறம் வெளிநாட்டு எண்ணெய் சார்பை குறைத்து, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com