ராகுல்-பிரியங்கா உறவு குறித்த சர்ச்சை கருத்து.. வலுக்கும் எதிர்ப்பு!

இந்தியப் பண்பாடு' குறித்தும் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்...
ராகுல்-பிரியங்கா உறவு குறித்த சர்ச்சை கருத்து.. வலுக்கும் எதிர்ப்பு!
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேச நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா இடையேயான சகோதரப் பாசம் குறித்து பொதுவெளியில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, தற்போது அவரது அமைச்சரவை சகா ஒருவரின் வெளிப்படையான ஆதரவால் மேலும் தீவிரமடைந்துள்ளது.

விஜய்வர்கியாவின் கருத்துகளை நியாயப்படுத்திப் பேசிய மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா (Vijay Shah), சகோதர உறவுகளின் பொதுவான வெளிப்பாடு குறித்தும், 'இந்தியப் பண்பாடு' குறித்தும் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் ஷாஜாபூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டு, "இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் தனது சகோதரியை வீதியின் நடுவில் முத்தமிடுகிறார். நீங்கள் உங்கள் இளம் மகளையோ, சகோதரியையோ பொதுவெளியில் முத்தமிடுவதுண்டா? இது பண்பாடு இல்லாததன் வெளிப்பாடு. " என்று கூறியிருந்தார்.

விஜய்வர்கியாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதை நியாயப்படுத்தி மற்றொரு மூத்த அமைச்சர் விஜய் ஷா பேசியிருப்பது அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளது.

கண்ட்வாவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்துகளை எதிரொலிக்கும் வகையில் பேசினார்.

"இது நமது பண்பாடு அல்ல. நமது நாகரிகமோ, பழக்கவழக்கங்களோ, பாரம்பரியங்களோ இதைக் கற்றுத் தரவில்லை. அவர்கள் [காந்தி குடும்பத்தினர்] எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் அவற்றை அவர்களின் வீடுகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்; பொது இடங்களில் அல்ல," என்று கூறினார்.

மேலும், தனது அருகில் இருந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரைச் சுட்டிக்காட்டிய விஜய் ஷா, "இவர் எனக்குச் சொந்தச் சகோதரிதான். அதற்காக நான் இவரைப் பொதுவெளியில் முத்தமிடுவேனா? இந்தியப் பண்பாடு இதைக் கற்றுத் தரவில்லை," என்று தெரிவித்தார்.

பாஜக அமைச்சர்களின் இந்தக் கருத்துகள், அண்ணன்-தங்கை உறவின் புனிதம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் காங்கிரஸ் கட்சி கருதுகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, விஜய்வர்கியாவின் கருத்துகள் "வெறுக்கத்தக்கவை" என்றும், "இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் புனிதமான சகோதர-சகோதரி உறவுக்கு நேரடி சவால்" என்றும் கடுமையாகச் சாடினார்.

மேலும், பதவி நீக்கம் செய்யப்படாததால் விரக்தி அடைந்த விஜய்வர்கியா மனநலம் பாதிக்கப்பட்டு இவ்வாறு பேசுவதாகவும், இரு அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஜிது பட்வாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com