"இனி DMK இல்லை.. TVK மட்டும்தான்" இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்! மின்வெட்டு போன்ற சிறிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் - நடிகர் ஜெய் பேச்சு

சின்னச் சின்னப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பல பகுதிகளில் பலமணி நேரம் தடைபடும் மின்வெட்டு பிரச்சனை குறித்து பேசினார்.
Actor Jai latest speech
Actor Jai latest speechActor Jai latest speech
Published on
Updated on
2 min read

சிவகாசியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நடிகர் ஜெய், அமைச்சர் கீர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் ஜெய், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரிய அளவில் வாக்களித்த மக்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் "தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு மட்டும் தராமல், இளைஞர்கள் அரசியல் என்றால் என்ன? கூட்டணி என்றால் என்ன? என்பதை தெரிந்து கொண்டார்கள். அதோடு நிறுத்தாமல், ஒரு படி மேலே சென்று சட்டசபையில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்கிறார்கள். இது போன்ற செயல் எல்லாம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யால்தான் நடக்கிறது" என்று பாராட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அடுத்த 5 ஆண்டுகள் நீங்கள் என்ன செய்தாலும் உங்களை எதிர்த்துதான் நிற்போம் என நினைக்கும் எல்லா கட்சிகளுக்கும் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்; தமிழக முதல்வர் விஜய் நேரத்தை முறையாகக் கடைபிடிப்பவர். பொழுதுபோக்குக்காக ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த அளவிற்கு பொறுப்பாக இருக்கிறார் என்றால், ஒரு மாநிலமே அவரது பாதையில் செல்ல வேண்டிய சூழலில், நம்மை நம்பி நமக்கு வாக்களித்து இந்த இடத்தை மக்கள் தந்துள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய் கண்டிப்பாக முதல்வர் என்ற பொறுப்பான வேலையை அழகாக மேற்கொள்வார். எனவே அவரை திரும்ப திரும்ப எதிர்ப்பதை வேலையாக செய்ய வேண்டாம்" என்று எதிர்கட்சிகளை சாடி பேசினார்.

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை விஜய் உருவாக்கியுள்ளதாகவும், முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டது போல் இன்னும் கொஞ்சம் கால அவகாசத்தை மக்கள் கொடுக்கவேண்டும் என்றும் அவர் மக்களிடத்தில் பேசினார். அவர் நல்லது தான் செய்வார் என்றும் தற்போதும் நல்லதுதான் செய்து கொண்டு இருக்கிறார் என்றும் பேசினார். மேலும், பேசிய நடிகர் ஜெய், "கரன்ட்லி (Curently) இருக்கும் பிரச்சனையே கரண்ட் பிரச்சனைதான்" என்று பேசினார். மேலும் அது போன்ற சின்னச் சின்னப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பல பகுதிகளில் பலமணி நேரம் தடைபடும் மின்வெட்டு பிரச்சனை குறித்து பேசினார்.

முதல்வர் விஜய் சொன்னது போல்,அவர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை கூடிய விரைவில் நிறைவேற்றுவார் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். மேலும், "நான் ஒரு படத்தில் முதல்வர் விஜய்க்கு தம்பியாக நடித்தேன். ஆனால் எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது தமிழகத்தில் யாருமே உங்களுக்கு த் தம்பியாக நடிக்கவில்லை. மாறாக அனைவரும் உண்மையான தம்பியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது" என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

தொடர்ச்சியாக பேசிய அவர், "முதல்வர் விஜய் எப்பொழுதுமே இரண்டு கட்சிகளுக்குத்தான் போட்டி என சொல்வார். ஒன்னு தவெக( TVK) இன்னொன்னு திமுக (DMK). மக்கள் அவர்( விஜய்) மீது வைத்துள்ள அன்பைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்தப் போட்டி இருக்குமா? என்று தெரியவில்லை" என்று சூசகமாக பேசினார் நடிகர் ஜெய். மேலும் வரும் தேர்தல்களிலும் தவெக மட்டும்தான் இருக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. என்றும் கூறினார் என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com