

அரசு பணி நியமனங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக தாக்கி பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், "தற்போது அரசு பணிகள் நியமனங்களில் நிலவரம் கலவரமாகி வருகிறது" என்று அவர் அதி காட்டமாக பேசியிருந்தார்.
மேலும் பேசிய அவர், முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்? என்ற கேள்வியை முன்வைத்தார். சிலபேரை பலகாலம் ஏமாற்றலாம் ,பல பேரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ,தமிழகத்தில் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் 'பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும்' என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது எல்லோரும் நம்பினோம். ஆனால், தற்போது அரசு பணி நியமனங்களில் நிலவரமோ கலவரமாக உருவாகி வருகிறது. முதல்வர் விஜய் தனது திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தற்போது அரசு பொறுப்பில் சத்தமில்லாமல் சைலண்டாக நியமித்து வருகிறார்கள் என்று திரைத்துறையில் இருப்பவர்களுக்கு அரசு துறையில் பணி நியமிப்பது குறித்து அவர் பேசினார்.
மேலும் பேசிய அவர், தற்போது கோயில் அறங்காவலர் நியமனகுழுவில் உறுப்பினராக முதல்வர் விஜய்யின் 'கோட்' (Goat) தயாரிப்பாளர் கேரளாவை பூர்விமாகக் கொண்ட அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர், கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போல முதலமைச்சரின் தனி செயலாளராக முதல்வர் விஜய் நடித்த 'லியோ' படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் விஜய் நடித்த 'பீஸ்ட்' பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார் என்று திரைப்படத்துறையில் இருந்து அரசு பணிகளுக்கு வந்தவர்களை வரிசைகட்டி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்வரின் அன்புக்குரியவரான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோர் அரசின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல் முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவரான 'அண்ணி திரிஷா மேடம்' அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் காத்திருக்கிறது தமிழகம் என்று நடிகை திரிஷா குறித்தும் அவர் தனது வீடியோவில் பேசியுள்ளார்.
மேலும், இதில் 'ஜனநாயகன்' பட இயக்குநர் வினோத், 'ஜனநாயகன்' படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்குகின்ற போது 6 மாதத்திற்கு மேல் அவருடன் நெருங்கி பழக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த எங்களுக்கே விஜய் மக்களுக்கு நல்லது செய்வாரா? என்று நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால், ஒரு முறை கூட விஜய்யை நேரில் சந்திக்காமல், பார்க்காமல் திரையில் மட்டுமே பார்க்க முடிந்த மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்று நம்பியது வியப்பாகத்தான் இருக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், அவர் பக்கத்தில் இருக்கின்ற எங்களுக்கே தெரியாதது மக்களுக்கு எப்படி தெரிந்தது? என்று பேட்டி கொடுத்திருக்கிறார், என்று அவர் எச். வினோத் பேசிய நேர்காணல் ஒன்றினை மேற்கோள் காட்டி பேசினார்.
எது எப்படியோ, இப்போது தமிழகத்தின் முதல்வராக மக்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்ற முதல்வர் விஜய் 'பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும்' என்று உரக்க கொள்கை முழக்கம் விடுவதற்கும், தற்போதைய அரசு பொறுப்புகளுக்கான நியமங்களுக்கும் முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது என்பதுதான் மக்களின் மனதிலேயே ஏற்பட்டிருக்கின்ற கவலை என்று தவெக சார்பில் சொல்லப்பட்ட கொள்கையை மேற்கோள் காட்டி தனது விமர்சனத்தை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், இது இப்படித்தான் செல்லுமோ ஏனென்றால், முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் ,மற்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் பாவம் செய்தவர்களா?. இன்றைக்கு தவெக அரசு பிரித்துப் பார்ப்பது அதன்படி அரசு பொறுப்புகளை நியமனம் செய்வது ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியுமா?, இது தான் ஜனநாயகமா? முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்? என்று தனது கேள்வியினை முன்வைத்தார்.
இன்றைய சமூகத்திலே பொய்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஒரு பொய்யை சமாளிக்கவும் மற்றொரு பொய்யை கூறவும் தகவல் தொழில்நுட்ப 'வார் ரூம்கள்' இப்போது வந்து விட்டன. இந்த வார் ரூம்களில் பொய்கள் கட்டமைக்கப்பட்டு, மாய பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு அரக்க குணம் உள்ளவர்கள் எல்லாம் ஆண்டவன் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அப்படித்தான் அரக்கப் குணம் கொண்டிருக்கிற விஜய் அவர்களை ஆண்டவன் போல் 'வார் ரூம்கள்' மூலமாக சித்தரித்த காரணத்தினால் தேர்தல் போர்க்களத்திலே உண்மையை தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஒருவன் பொய் சொல்லி ஜெயித்து விட்டான் என்றால் எதிர் தரப்பில் உண்மையைச் சொல்லி ஜெயிக்க முடியாது, இது நான் சொல்லவில்லை ஜனநாயக படம் வெளியிட்டதையொட்டி அந்த படத்தை இயக்கிய வினோத் விஜய்யுடன் நட்பின் அனுபவத்திலே உண்டான கருத்துக்களை வெட்ட வெளிச்சமாக்கி விவரித்து சொல்லியிருக்கிறார்கள் அதுவே இதற்கு சாட்சியாக இன்றைக்கு அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆகவே இன்றைக்கு 'வார் ரூம்கள்' பொய்கள் கட்டமைத்து தேர்தல் களத்திலே தற்காலிக வெற்றிவாகை சூடி வருகிறது அதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அரசின் பொய்களை எதிர்த்து உண்மையைச் சொல்லி வெல்ல முடியாமல் உண்மைக்கும் சத்தியத்திற்கும் தற்காலிகமாக தோல்விதான் கிடைத்து வருகிறது. உண்மை தமிழ் சமூகம், உணர்வுள்ள தமிழ் சமூகம், ஆற்றல் வாய்ந்த தமிழ் சமூகம், அறிவார்ந்த தமிழ் சமூகம், பண்பாடும் நாகரிகமும் தனக்கே சொந்தமான இந்த தமிழ் சமூகம் விழித்தெழும் நாள் வெகு தொலைவிலே இல்லை, சிலபேரை பலகாலம் ஏமாற்றலாம் ,பல பேரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதுதான் காலம் தருகின்ற தீர்ப்பு. அந்த தீர்ப்பு வருவதை இந்த தமிழ் இனம் உண்மையை நிலைநாட்ட உண்மையை வெற்றி பெறச் செய்ய தொடர்ந்து போராடும் என தனது வீடியோவில் பேசினார் ஆர்.பி. உதயகுமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்