கரூர் விவகாரத்தில் திமுக சார்பில் தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற்றுள்ளனர். வழக்கை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் திமுக வாபஸ் வாங்கியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, பிரச்சாரத்திற்காக சென்ற போது ஏற்பட்ட கூட நெரிசல் காரணமாக 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் CBI வழக்கு பதிவு செய்து புலன் விசாரணையும் செய்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாமல்லபுரத்தில் நடந்த அதிமுகவினர் தவெக-வில் இணையும் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் கரூர் சம்பவம் குறித்து பேசினார். அதாவது, "கரூரில் ஒரு முக்கியமான கணக்கு வழக்கு இருப்பதாகவும், அதை முடிக்காமல் விடப்போவதில்லை" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், கரூரில் திட்டமிட்டு கூட்டநெரிசலை உருவாக்கியதாகவும் திருப்பூரில் காவல்துறை ஒத்துழைப்பு இல்லாததால் மீண்டும் கூட்டநெரிசல் சூழ்ச்சியை செய்ய நினைத்ததாகவும் ஆதவ் அர்ஜுனா அந்த நிகழ்ச்சியில் பேசினார். இந்த விவகாரத்தில் அமைச்சர் நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டிய திமுக, ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து ஆர்.எஸ். பாரதி தரப்பில் இருந்து உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இதில் சம்பத்தப்பட்ட ஜோசப் விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் குற்றசாட்டுகளை சுமத்தியோ, எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சுதந்திரமான விசாரணையை பாதிக்கும் வகையிலோ பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கள் சாட்சிகளை கலைக்கும் வகையிலும், விசாரணைக்கே முட்டுக்கட்டை போடும் வகையிலும் இருப்பதால் அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு நேற்றைய தினம் கூறியிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். "பலியான குடும்பத்தாருக்கும், காயமடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வது எப்படி சாட்சியங்களை அளிப்பது ஆகும்?" என்று உச்சநீதிமன்றம் கேள்வியை முன்வைத்துள்ளது. மேலும், "முதல்வரின் பேச்சை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனக் கூறுகிறீர்களா?, சுதந்திரமான பேச்சுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?" என்றும் நீதிமன்றம் முன்வைத்தது. மேலும், இந்த மனுவை உச்சநீதி மன்றம் ஏற்க மறுத்துள்ளது. இதனால் திமுக தரப்பில் இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.