
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி இருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தவெக தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
எதிர்மனுதாரராக விஜய் இல்லாத போது, ஐகோர்ட் விமர்சனம் செய்துள்ளது. விஜய் பரப்புரை வாகனத்தில் இருந்து தொண்டர்கள் கீழே விழுவது போன்ற வீடியோவை பார்த்து சென்னை உயர்நீதிமன்றம் விஜய் தொடர்பான இவ்வாறான கருத்தை கூறி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தவெக கட்சி நிர்வாகிகளை காவல்துறை அனுமதிக்கவில்லை. காவல்துறை தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படியே பரப்புரை நடந்தது.
அதிகாரிகள், காட்டிய வழியில் தான் விஜயின் பரப்புரை வாகனம் வெளியேறி சென்றது. விஜய் அங்கிருந்தால் மேலும் பிரச்சனையாகி விட கூடாது என்று காவல்துறை தான் கூறினார்கள். காவல்துறையின் பாதுகாப்புடன் தான் கரூரில் இருந்து வெளியேறினார் விஜய். தப்பித்து சென்றதாக அரசு வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில் தவெக தரப்பு இப்படி ஒரு வாதத்தை முன்வைத்தது. விஜய் தப்பித்து ஓடியதாக அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது. அவர் தப்பி ஓடவில்லை.
எஸ் ஐ டி விசாரணைக்கு தவெக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எந்த ஒரு தரப்பையும் சாராத விசாரணை வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. மாநில அரசின் விசாரணை அமைப்புகள்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் வளர்ந்து வரும் கட்சி, நியாயமான விசாரணை வேண்டும்” என்றும் கோரியுள்ளது.
கரூர் சம்பவம் குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் விஜய் ஏன் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை? அவர் நேரத்துக்கு வராதது தான் கரணம் என பல்வேறு குற்ற சாட்டுகளை முன்வைத்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கூட்டத்தில் சில ரவுடிகள் புகுந்ததால் தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது எனவும், காவல் துறையினர் உத்தரவின் பேரில் தான் விஜய் கரூரில் இருந்து சென்றதாகவும், அவர் மீது தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தனர்.
“எப்படி ஒரே இரவில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது” என உயிரிழந்த குலத்தின் தந்தை எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்திருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “ஏன் மதுரை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.