சைக்கிளா? காரா? நீலாங்கரை பூத்துக்கு விஜய் எப்படி வருவார்? 2021-ல் கிளம்பிய அதே சர்ச்சை.. செம வெயிட்டிங்கில் தவெக தொண்டர்கள்!

விஜய் நேரடியாகவே முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முதல் எலக்சன் என்பதால், இன்றைய அவரது வருகை மிக மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது...
vijay vote
vijay vote
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று காலை முதல் படுவேகமாக நடந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் ஆர்வமாக ஓட்டு போட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இப்போது நடிகர் விஜய் மீதுதான் இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய், தனது வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு எப்படி வருவார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். கடந்த காலங்களில் அவர் ஓட்டு போட வந்த விதம் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் மெசேஜாகவே பார்க்கப்பட்டதால், இந்த முறையும் அவர் ஏதேனும் ஒரு சிக்னல் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் 2021 சட்டமன்றத் தேர்தல். அப்போது விஜய் தனது வீட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஒரு கருப்பு மற்றும் சிவப்பு நிற சைக்கிளில் மிதித்துக்கொண்டு வந்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்துதான் அவர் சைக்கிளில் வந்ததாக ஒரு பக்கம் பேச்சு ஓடியது. ஆனால், அவர் ஓட்டி வந்த சைக்கிளின் நிறம் திமுகவின் கொடி நிறத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. அவர் பச்சை நிற டி-சர்ட் அணிந்து, கருப்பு-சிவப்பு சைக்கிளில் வந்ததை வைத்து, அவர் மறைமுகமாக ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அந்தச் சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 2024 லோக் சபா தேர்தலின் போது, விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த சமயம் அது. அப்போது அவர் மிகவும் சிம்பிளாக ஒரு வெள்ளை நிற சட்டையில் தனது சொகுசு காரில் வந்து ஓட்டு போட்டார். அந்த முறை எந்தவித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல், ஒரு பொறுப்பான குடிமகனாகத் தனது ஜனநாயகக் கடமையை அமைதியாக முடித்துவிட்டுச் சென்றார். ஆனால், இன்று நடப்பது சட்டமன்றத் தேர்தல். விஜய் நேரடியாகவே முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முதல் எலக்சன் என்பதால், இன்றைய அவரது வருகை மிக மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

வாக்குச்சாவடி அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் இப்போதே தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. அவர் தனது கட்சியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏதேனும் ஒரு உடை அணிந்து வருவாரா அல்லது கடந்த முறையைப் போல ஏதாவது ஒரு வாகனத்தைப் பயன்படுத்தி ஒரு மெசேஜ் சொல்வாரா எனப் பலரும் விவாதித்து வருகின்றனர். தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குச்சாவடிக்குள் கட்சி சின்னம் அல்லது கொடியுடன் வரக்கூடாது என்பதால், விஜய் மிகவும் கவனமாகத் தனது வருகையைத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அவர் வரும்போது அந்தப் பகுதியே ஸ்தம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இப்போதே 'தளபதி கமிங்' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அஜித்தின் அதிகாலை வாக்குப்பதிவு ஏற்கனவே வைரலாகிவிட்ட நிலையில், விஜய்யின் என்ட்ரி அதைவிட மாஸாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீலாங்கரை பூத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விஜய் இன்னும் சில நிமிடங்களில் அங்குக் கிளம்பி வருவார் எனத் தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com