“2021 சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பல கட்டங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். எனினும், அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஓபிஎஸ் தற்போது தனது ஆதரவாளர்களை திரட்டி "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறர்.
அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் காட் பாதராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை.
இதனையடுத்து பாஜக மீதான தனது அதிருப்திகளை ஓபிஎஸ் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக வெளிப்படையாகவே பேசியிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இதுவரை நீடிக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். ஆனாலும், ஓபிஎஸ்ஸை கூட்டணியில் ஏற்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாய் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். ஆனால் அவரை சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. தர்மயுத்த காலகட்டத்தில் ஓபிஎஸ் - ஐ எப்போது வேண்டுமானாலும் பார்க்க தயாராக இருந்த பிரதமர், விமான நிலையத்தில் கூட அவரை பார்க்க விருப்பம் காட்டவில்லை. ஓபிஎஸ் தரப்புபிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் கொடுத்ததும் அது நிராகரிக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்திக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து விலகியே விட்டார். இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் தமிழ் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில், “பிரதமரை சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பேசி வாங்கிகொடுத்திருப்பேன், இதுபற்றி எனக்கு தெரியாது என பேசியிருந்தார்”
இந்நிலையில் பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கித் தருமாறு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தான் அனுப்பிய குறுஞ்செய்தியை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதாரமாக காட்டியுள்ளார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போக போனிலும் 6 முறை அழைத்தும் தனது அழைப்பை நயினார் நாகேந்திரன் எடுக்கவில்லை என்றும் அவர் தரப்பு ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.
கடந்த ஜூலை 26ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி பெற்று தருமாறு நயினார் நாகேந்திரனின் செல்போன் எண்ணுக்கு, ஓபிஎஸ் இரு முறை மெசேஜ் அனுப்பியுள்ளார். ஜூலை 12 ஆம் தேதி சனிக்கிழமையும் ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமையும் இந்த மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். அதில் "HONOURABLE AIADMK COORDINATOR MR.O.PANNERSELVAM WANTS TO SPEAK WITH YOU" குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மெசேஜ்களை செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் காண்பித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.