11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு..! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி… நீதிமன்றம் சொல்வது என்ன!?

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் ...
Madras-High-Court
Madras-High-Court
Published on
Updated on
1 min read

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 11  மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக,  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தர்அவிடக் கோரி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என். ராஜசேகரன் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில்,  மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள்  விசாரணை செய்வதற்கு  வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து, தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான ராஜசேகரன் நேரில் ஆஜராகி, தமிழில் வாதங்களை முன்வைக்கத் துவங்கினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் என்பதால், ஆங்கிலத்தில் வாதாட வேண்டும். அல்லது, வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் மனுதாரரிடம், என்ன தொழில் செய்கிறீர்கள்? எவ்வளவு நிலம் உள்ளது? என்ன சாகுபடி செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மனுதாரர், 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி  செய்வதாகக் கூறினார்.

இதையடுத்து, விவசாயத்தை கவனித்து, நிலத்தை பாதுகாக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும்படி கூறி, வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com