கட்சியில் செங்கோட்டையனுக்கே இப்படியொரு நிலைமைன்னா.. ம்ஹூம்.. ரொம்ப கஷ்டம் - விளாசும் லட்சுமணன்

ஒரு மக்கள் தலைவராக உருவெடுக்க விரும்புபவர் ஒவ்வொரு முறையும் சாமானிய மக்களிடமிருந்து தன்னைத்...
கட்சியில் செங்கோட்டையனுக்கே இப்படியொரு நிலைமைன்னா.. ம்ஹூம்.. ரொம்ப கஷ்டம் - விளாசும் லட்சுமணன்
Published on
Updated on
2 min read

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீதான சிபிஐ விசாரணை மற்றும் அவரது அரசியல் முதிர்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், விஜய் மீதான சிபிஐ விசாரணை என்பது சட்டப்படியான ஒரு சாதாரண நடைமுறை தான். இந்த விசாரணைக்காக அவர் டெல்லி செல்வதைத் திரையுலகப் பிம்பமாகவே ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன. ஒரு நடிகராகத் தனி விமானத்தில் பயணிப்பது ரசிக்கப்படலாம், ஆனால் ஒரு மக்கள் தலைவராக உருவெடுக்க விரும்புபவர் ஒவ்வொரு முறையும் சாமானிய மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல. "அப்படி என்ன பெரிய ஆள் நீங்கள்?" என்று கேள்வி எழுப்பிய அவர், பாதுகாப்பைக் காரணம் காட்டி ஒதுங்கியே இருப்பவர் எப்படி மக்களுக்காகக் குரல் கொடுப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யின் மௌனம் என்பது "நேர்மையற்ற கள்ள மௌனம்" என்று சாடிய லட்சுமணன், 'ஜனநாயகன்' திரைப்படச் சிக்கல் குறித்தோ அல்லது சிபிஐ விசாரணை குறித்தோ விஜய் ஏன் இன்னும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார். "நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ரசிகர்கள் அமைதி காக்கவும்" என இரு வரிகள் பதிவிடுவதற்குக்கூடத் தயங்குவது அவரது அச்சத்தைக் காட்டுகிறதா அல்லது அரசியல் உத்தியா என்ற விவாதம் எழுகிறது. திரையில் வசனம் பேசுவதோடு நின்றுவிடாமல், நிஜ அரசியலில் ஒரு தலைவனாகப் பொறுப்புணர்வோடு கருத்துக்களை முன்வைக்க வேண்டியது அவசியம்.

பாஜகவுடனான உறவு குறித்துப் பேசுகையில், அமித் ஷாவின் நேரடி ஆசியின்றி ஒருவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கிடைப்பது சாத்தியமில்லை. இதன் மூலம் திரைமறைவில் சில இணக்கமான சூழல் நிலவுவதை மறுக்க முடியாது. இருப்பினும், வரும் தேர்தலில் விஜய் பாஜக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு குறைவு என்றே அவர் கருதுகிறார். தன்னை ஒரு கிறித்தவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் விஜய், பாஜகவுடன் இணைந்தால் தனது அடிப்படை வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்பதை அவரோ அல்லது அவரது ஆலோசகர்களோ உணர்ந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.

கட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை விஜய்யின் செயல்பாடுகள் முதிர்ச்சியின்றி இருப்பதாக லட்சுமணன் விமர்சித்தார். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் போன்ற ஆளுமைகளை, கட்சியில் சேர்ந்து ஓராண்டுகூட ஆகாதவர்களுக்குக் கீழ் ஒரு குழுவில் இடம்பெறச் செய்தது ஒரு மோசமான முன்னுதாரணம். "நிதியுதவிக்காக மூத்த தலைவர்களின் தன்மானத்தை அடகு வைப்பவர் ஒரு தலைவனாக முடியாது" என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய செயல்கள் மற்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சிக்குள் வருவதைத் தடுத்துவிடும் என்று எச்சரித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் விஜய் இணைந்தால், அது அவரது "முதலமைச்சர்" என்ற இலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். ஊடகங்கள் விஜய்யின் சிறு அசைவுகளையும் "டீகோட்" செய்துகொண்டிருக்காமல், அவரைப் பொறுப்புள்ள பதிலைச் சொல்ல வைக்க வேண்டும். தலைமைப் பண்பு என்பது தொண்டர்களைக் கன்வின்ஸ் செய்வதே தவிர, சர்வாதிகாரமாக முடிவுகளைத் திணிப்பது அல்ல என்பதை விஜய் உணர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com