தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசும் போது, “சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு (விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்புவோம், சட்டமன்றத்தை கூட்டிப்பார்” என்று முதல்வர் விஜய் குறித்து பேசி இருந்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் MLA மார்க்கண்டேயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சிறையில் அவரை சந்தித்த அவரது மகன் அக்ஷய் மார்கண்டேயன் செய்தியாளர்களை சந்தித்து அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய அப்பா வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்த பிறகு, 13 மணி நேரமாக விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அவரை மிரட்டியுள்ளனர். இது சாதாரண விசாரணை அல்ல. அவருக்கு மிகுந்த மன அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார். மேலும், "என்னுடைய அப்பாவை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக அவர் என்னிடம் கூறியுள்ளார். அவர் கூறுவது முற்றிலும் உண்மை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அக்ஷய் மார்கண்டேயன், "தமிழக முதல்வரே... உங்களுடைய மகன் தற்போது உங்களுடன் இல்லை. ஆனால், நான் என் அப்பாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என் அப்பா இன்னும் விளாத்திகுளம் மக்களுக்காக பல சேவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். அவரை இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது" என்று உருக்கமாக கூறினார்.தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ மார்கண்டேயன் தொடர்பாக, அவரது மகன் அக்ஷய் மார்கண்டேயன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.