தமிழ்நாட்டில் ஜனநாயக திருவிழா இன்று காலை தொடங்கவுள்ள நிலையில், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது. பலரும் தங்களது வாக்குகளை செலுத்த ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர். வரும் மே மாதம் 4ம் தேதி தமிழ்நாட்டின் அரியணையில் யார் அமரபோகிறார்கள் என்பது தெரிந்து விடும். மக்களின் வசதிக்காகவும், முதல் முறை வாக்காளர்களுக்காகவும் பல்வேறு வசதிகள் அந்தந்த தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 2026ம் ஆண்டு வாக்குப்பதிவானது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதால் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற ஆவலாக உள்ளனர். ஆனால், சில சமயங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையை தொலைத்துவிடுவது போன்ற திடீர் சூழலுக்கு தள்ளப்படும் நிலை வரலாம். 'வாக்காளர் அட்டை இல்லை' என்று நினைத்து வாக்களிக்காமல் மட்டும் இருக்கவேண்டாம் மக்களே!.
வாக்காளர் அட்டையை தவிர்த்து வேறு எந்த எந்த அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று பார்க்கலாம். சமீபத்திய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, உங்கள் வாக்காளர் அட்டையை நீங்கள் தொலைத்தால், உங்களிடம் உள்ள ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, கடவு சீட்டு (Pass port), ஓய்வூதிய அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் அட்டை (Pan Card), ஓட்டுநர் உரிமம், வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள், MNREGA வேலை அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு போன்ற அட்டைகளை பயன்படுத்தி உங்களது ஜனநாயக கடமையை ஆற்றலாம்.
மேலும், முக்கியமாக நீங்கள் வாக்களிப்பதற்கு முன், உங்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். தேசிய வாக்காளர் சேவை இணையதளம் மூலமாகவோ அல்லது உங்கள் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சார்பார்ப்பதன் மூலமாகவோ நீங்கள் அறிந்துகொள்ளலாம். உங்களிடம் செல்லுபடியாகும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் வாக்களிக்க நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். இதை தவிர்த்து, குடிமக்கள் வாக்காளர் உதவி எண்ணை அழைக்கலாம், அதன் எண் '1950'. இப்போது நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு குடிமகனும், தேர்தல் நாளின் எந்த நேரத்திலும், எந்தவொரு கேள்வி அல்லது புகாருக்காகவும் இந்தக் கட்டணமில்லா எண்ணை ஆங்கிலம் அல்லது இந்தியில் அழைக்கலாம். இந்தக் கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் எளிதாகப் புகாரையும் பதிவு செய்யலாம்.
ஆகவே, மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து 2026ம் ஆண்டுக்கான ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்