

கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் 6 மாதத்திற்குள் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அறநிலையத் துறை ஆணையர், அறநிலையத் துறை வேலூர் இணை ஆணையர், அறநிலையத் துறை திருப்பத்தூர் ஆய்வாளர் ஆகியோர் மீது எஸ்.நடராஜன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு, நீதிமன்ற உத்தரவை 6 மாதங்களில் அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, அறநிலயத்துறை ஆணையர், இணை ஆணையர், ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
அதேபோல, நிலங்களை கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்வதில் ஓராண்டுக்கு மேல் காலதாமதம் செய்த திருப்பத்தூர் தாசில்தாரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.