
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி இன்று (ஜூலை 27) காலை 11 மணியளவில் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தடைந்தார். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்று, பிரகதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நாளை மதியம் மீண்டும் திருச்சிக்கு சென்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார், அதிரடிப்படை போலீசார் மற்றும் மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவான எஸ்.பி.ஜி. குழுவினர் என ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து வந்துள்ள எஸ்.பி.ஜி. அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்கள்
பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனியார் நட்சத்திர விடுதி வரை விமான நிலையம் அமைந்துள்ள புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் இருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர தரைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பிரதமர் மோடி தங்கும் நட்சத்திர விடுதி அருகிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர பகுதியில் 24-ந்தேதி முதல் நாளை 27-ந்தேதி வரை 4 நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், மீறி இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.