

இன்று காலை முதல் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேருவுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுதியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என். நேரு, கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்தவர். தற்போது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என். நேருவின் வீடு, திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லம், அபிராமபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் குழுவாக வந்து வீடுகளில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், திருச்சி தில்லைநகரில் உள்ள தனது இல்லத்திற்கு கே.என். நேரு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 19 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சோதனைக்கான முழுமையான காரணங்கள் மற்றும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ள ஆவணங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய நிர்வாகியுமான கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெறுவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்