செங்கோட்டையன் பதவி பறிப்பு! “ஒரு அளவுக்குத்தான் ப்ரோ.. எல்லாத்துக்கும் என்ன ஏன் திட்டுறீங்க..!?” -கடுப்பில் அண்ணாமலை!!!

நான்தான் அந்த மூனு பேரையும் சேர்த்தேனா.. நான் பசும்பொன் செல்லாமல் அவர்கள் மூனு போரையும் பின்னால் இருந்து இயக்குகிறேனா?...
Annamalai press meet today
Annamalai press meet today
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

செங்கோட்டையன் நீக்கம்!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமான ஒன்று  என்பதை தமிழ் நாடு நமக்கு அறிந்தது. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது. 

இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார். 

ஆனால் இதற்கு பிறகு அதிமுக -விலிருந்து எடப்பாடியால் ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணையப் போகிறது  என்ற பேச்சுக்கள் எழுந்தன. 

இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான்,  நேற்றைய தினம், முத்துராமலிங்க தேவரின்  நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் கட்சி கட்டுப்பாட்டை மீறியதோடு எடப்பாடியையும்  கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது..  மேலும் நேற்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.. “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்” செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக எடப்பாடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை தான் காரணமா!?

ஆரம்பகட்டத்தில் பாஜக - அதிமுக கூட்டணி பொருந்தாமல் போனதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் முக்கியான ஒன்று அண்ணாமலை. அதற்கு காரணம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியை “தற்குறி” என்றெல்லாம் விமர்சித்திருந்தார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்” என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை ஏற்கனவே பேசியிருந்தார், இதன் விளைவாக இபிஸ் -க்கும் அண்ணாமலைக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருந்தது.

அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட்ட காரணமே கூட்டணிக்காகத்தான் என்ற பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த சலசலப்புக்கு மத்தியில் தான் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து விமர்சித்திருந்தார். இதெற்கெல்லாம் காரணம் அண்ணாமலை தான், அண்ணாமலையில் தூண்டுதல் பேரில்தான் தினகரன் கட்சியை விட்டு வெளியேறினார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக அதிமுக -வில் எழும் சலசலப்புக்கு பிண்ணனியில் பாஜக இருக்கிறது என்றால் அண்ணாமலையும் இருப்பார் என்றே சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் இன்று செங்கோட்டையன் கட்சி நீக்கத்திற்கு பிறகு, இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக -வின் அண்ணாமலை பல விஷயங்கள் குறித்து பேசினார், அப்போது கூட்டணி கட்சியின் விவகாரங்கள் குறித்து பேசிய அவர், “எனக்கு தமிழகத்தில் ஒரு தூய அரசியல் அமைய வேண்டும்  அதற்காகத்தான் பாஜக உழைக்கிறது. சில நேரங்களில் என் மனசாட்சிக்கு விரோதமாகவும் பேசுகிறேன், காரணம் மேடை நாகரிகம், நான் உணருவதை எல்லாம் பொது மேடையில் பேச முடியாது. மேலும் நான்தான் அந்த மூனு பேரையும் சேர்த்தேனா.. நான் பசும்பொன் செல்லாமல் அவர்கள் மூனு போரையும் பின்னால் இருந்து இயக்குகிறேனா? என பல கோணத்தில் எழுதுவார்கள்.. நானும் எதற்கும் பொறுப்பில்லை ..அது அது தானாகவே நடக்கிறது. அதற்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும். மேலும், நான் தற்போது அதிமுக தலைவர்கள் பற்றி பேசுவதே இல்லை. ஆனால் அதிமுக -வில் உள்ள எத்தனையோ தலைவர்கள் என்னை திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நான் அமித்சா அவர்களுக்கு கொடுத்த வாக்கிற்காக நான் அமைதியாக இருக்கிறேன். என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com