தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் கணிக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள்.
இது இப்படி இருக்க, ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
சின்ன ரீவைண்ட்!
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமானது என்பதை தமிழ்நாடு நன்கு அறிந்த ஒன்று. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது.
இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான், முத்துராமலிங்க தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். இதுதான் சமயம் என நினைத்த எடப்பாடி, ‘கட்சிக்கு எதிரான செயலில் ஈடுபட்டார் செங்கோட்டையன் எனக்கூறி அவரை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்தும் நீக்கினார். இது எடப்பாடிக்கு பெரும் பின்னடைவு என்றே கருதப்பட்டது.
இந்த சலசலப்புக்கு இடையில் தான், “ அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான். 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் நான் உள்பட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமெனகேட்டிருந்தோம். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் அந்த 18 பேரையும் அவர் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்” என பரபரப்பான கருத்தை கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு அதிமுக தலைமை எவ்வித பதில்வினையும ஆற்றாமலே இருந்து வந்தது. நாங்கள் அதிமுக உடன் கூட்டணியில் உள்ளோம் ஆனால், அவர்களின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என பேசிய பாஜக -வா இப்படி செய்தது என கேள்வி எழுப்பப்பட்டாலும், அவர்கள் தரப்பும் செங்கோட்டையனின் பேச்சுக்கு பேச்சுக்குக்கூட மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயுடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்!
50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்த செங்கோட்டையனை எடப்பாடி அதிரடியாக நீக்கியிருந்தது, அவருக்கு பெரும் பின்னடைவுதான் என்கின்றனர் ஆர்வலர் பலர். முன்னதாக செங்கோட்டையன் தவெக -வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் இன்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் செங்கோட்டையன் வருகிற 27 -ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக வெளியான தகவல்கள் 90% உறுதியாகியுள்ளது.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலிருந்து தமிழகத்தில் மறுக்க முடியாத சக்தியாக மாறி உள்ளார். விமர்சனங்கள் இருந்தாலும், பிரதான கட்சிகளுக்கும் கூட அவர் தேவைப்படுகிறார் என்பதே நிதர்சனம். சினிமாவில் ‘introvert’ -ஆக இருந்துகொண்டு உச்ச நட்சத்திரமாக மாறிய விஜய் அரசியலிலும் நிதானமாக காய் நகர்த்துகிறார் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.
மேலும் மூத்த பத்திரிகையாளர், பிரியன் இதுகுறித்து பேசுகையில், “செங்கோட்டையன் தனியாக போகமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அவர் தன்னுடன் இருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை உடன் அழைத்துச்செல்லவே வாய்ப்பு உண்டு. ஆனால் எதையும் தற்போது உறுதியாக சொல்ல முடியாது. மேலும் இது விஜய் -க்கு நிச்சயம் பலம் தான். ஒருவேளை செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கூட்டாக சேர்ந்து விஜய் -உடன் சேர்ந்தால், முக்குலத்தோர் வாக்குகள் அனைத்தையும் விஜய் பெறுவார்.
ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருக்கலாம், பாஜக சொல்லித்தான் அதிமுக -வை இணைக்க முயன்றேன் என்றார். மேலும் இந்த நால்வரும் எதோ வகையில் பாஜக -வின் பேச்சை கேட்கக் கூடியவர்கள்தான். ஒருவேளை தேர்தலுக்கு பிந்தைய வேலைக்காக பாஜக -வே ஏன் இவர்களை தவெக -விற்குள் இறக்கியிருக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு யார் யார் என்னென்ன வாக்குகளை பெறுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுட்டு பாஜக காய் நகர்த்தும்.விஜய்க்கு திமுக -வின் எதிர்ப்புதான் பிரதானம். ஆனால் அவர்களுக்கு பாஜக -உடன் முதல் தேர்தலிலேயே கூட்டணி வைப்பது பாஜக -வின் எதிர்ப்பு வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும் அமைதியாக இருப்பார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.