அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பிக்கு சம்மன்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பிக்கு சம்மன்!
Published on
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி  அசோக்குமாருக்கு சொந்தமான அலுவலகத்தில் சோதனை நடத்திவரும்  வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

கரூரில் பல்வேறு இடங்களில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதால் சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் ஐந்தாவது நாளான இன்று அதே பகுதியில் அமைந்துள்ள அசோக்குமார் அலுவலகமான அப்பெக்ஸ் இன்பக்ஸ்-ல் இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், அசோக் குமார் வீட்டில் சென்னை வருமான வரித்துறை உதவி இயக்குனர் நாகராஜ் அனுப்பிய சம்மன் அந்த அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இன்று காலை 10:30 மணிக்குள் அவரோ அல்லது அவர் சார்பாக பிரதிநிதி ஒருவர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித்துறை பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, கணக்கு வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அசோக்குமாரின் ஆடிட்டர் ஒருவர் ஆஜராகி கால அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com