

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலக படை வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும். பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினர் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை கோவில் நிர்வாகம் அமல்படுத்தாததால், நேற்று மாலையே சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு மலையில் உள்ள தீபத் தூணில் தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் கூடியிருந்த இந்து அமைப்பினர் காவல்துறையின் தடுப்புகளை மீறி மலையேற முயற்சித்தித்ததால் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். மேலும், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இரு நீதிபதிகள் அமர்வில் தொடங்கியது. அதில் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது. அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு மனுதாரர் தரப்பு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன, இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர். தனி நீதிபதி உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கப் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் வீரர்கள் நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ளவர்கள். அவர்களின் அதிகார வரம்பு நீதிமன்றத்துக்குள் மட்டுமே. அவர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு. அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், உத்தரவை நிறைவேற்றப்படாதது ஏன்? அதற்கான விளக்கத்தை மட்டுமே கேட்க முடியும். ஆனால், அவமதிப்பு வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மனுதாரர் கூட்டமாக சென்று பிரச்னை ஏற்படுத்தியதால் அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை." எனத் தெரிவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக நீதிபதிகளின் கேள்விக்கு, கலவரத்தை தடுப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு பதிலளித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் கோயிலைவிட தீபத் தூண் பழமை வாய்ந்ததா? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, அதுபற்றிய தகவல் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதியின் உத்தரவை கோயில் நிர்வாகம் அமல்படுத்தாததால்தான் மீண்டும் உத்தரவிடப்பட்டது, காவல்துறை பாதுகாப்பு அளிக்காததால், சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். “ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் விதி தவறு இருப்பதாக தெரியவில்லை” என’ நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.