திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வரும் நிலையில் இவரது 27 வயதான மகள் ரிதன்யாவை, அதே பகுதியை ஈஸ்வரன் சித்திராதேவி தம்பதியின் 28 வயதான மகன் கவின் என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களது திருமணத்தை அண்ணாதுரை தனது மகளின் மீது இருந்த பாசத்தில் மிக பிரமாண்டமாக செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று ரிதன்யா மொண்டி பாளையம் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் தனது காரில் பூச்சி மாத்திரைகள் உண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது போனில் இருந்து தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் செய்துள்ளார். அதில் “அப்பா என்னை மன்னிச்சிடுங்க என் உலகமே நீங்களும் அம்மாவும் தான், நீங்க என் மேல வெச்ச எந்த ஆசையும் நிறைவேறல நான் நல்ல இருக்கனும் நினைச்சி கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஆன இங்க ரொம்ப கஷ்டமா இருக்கு.
கவினும் அவங்க அம்மா அப்பாவும் நம்ம நினைச்ச மாறி இல்ல, அவங்க எல்லாமே கிரிமினல் பிளான் போட்டு தான் என்ன கல்யாணம் பண்ணி இருக்காங்க, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை ரொம்ப கஷ்டபடுத்துறாங்க. இதுக்கு மேல இந்த வாழ்க்கையை என்னால வாழ முடியும் என்று தோணல நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இவனை விட்டுட்டு இன்னொரு வாழ்க்கை வாழலாம் நினைக்கிற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல அப்பா.
நான் தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்த பிறகும், இதை வச்சு உங்களை அசிங்கப்படுத்துவங்க அப்பா, நீங்க கவலைப் படாம இந்த வாய்ஸ் மெசேஜ் எல்லாருக்கும் போட்டு காட்டுங்க. எல்லாம் அவ்வளவு தான் முடிஞ்சது நான் எந்த தப்பும் செய்யல, அப்பா என்னை நீங்களும் அம்மாவும் மன்னிச்சிடுங்க” என கூறி மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து காரில் ஒரு பெண் மயங்கி இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரிதன்யாவின் உடலை கைப்பற்றி, பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர் மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து ரிதன்யாவின் தற்கொலைகான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ரிதன்யாவின் வாய்ஸ் மெசேஜ் கேட்ட அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் கவினை உடனடியாக கைது செய்ய சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் உறவினர்களிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் இருந்த தனது மனைவியின் உடலை பார்க்க வந்த கவினை உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமணமான இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.