

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜயை வரும் மார்ச் 15ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று கரூரில் விஜய் உரையாற்றிய பேரணியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தவெக விஜயிடம் சிபிஐ ஏற்கனவே இரண்டு முறை விசாரணை நடத்தியது. ஜனவரி 12 ஆம் தேதியும், ஜனவரி 19 ஆம் தேதியும் அவர் விசாரணைக் குழு முன் ஆஜரானார். முதல் கட்ட அமர்வின் போது, சிபிஐ தலைமையகத்தில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணை அதிகாரிகள் பின்னர் கூடுதல் தகவல்களைச் சேகரித்துள்ளதாகவும், விஜயிடம் இருந்து மேலும் விளக்கம் தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 10,000 பேர் மட்டுமே கூடும் இடத்தில் விஜயை பார்க்க கிட்டத்தட்ட 30,000 பேர் கூடியது, மேலும், எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யாமல் இருந்தது, பலமணி நேரம் மக்களை காக்கவைத்தது போன்றவையே முக்கிய காரணங்களாக கூறப்பட்டது.
இந்நிலையில் மார்ச் 9 அன்று மீண்டும் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விஜய் அதை 15 நாட்களுக்கு ஒத்திவைக்கக் கோரினார். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் மற்றும் அரசியல் ஈடுபாடுகளை காரணமாக கூறி சென்னையிலோ அல்லது தமிழ்நாட்டின் எந்த ஒரு அலுலகத்திலும் விசாரணையை வைக்குமாறு வலியுறுத்தினார். தற்போது சிபிஐ, விஜயை மார்ச் 15 ஆம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கு முன்பு, குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிரச்சார மேலாண்மை குழு பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரிடம் கரூர் சிபிஐ தற்காலிக அலுவலகத்தில், கடந்த நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும், தற்போது கரூரைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை மார்ச் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து முன்னுக்கு பின்னான தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது 'X' பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் தெரிவித்திருந்தார். அதாவது, "கரூர் துயர சம்பவம் குறித்து வரும் 17-ம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சட்டமற்ற தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்