சிவகங்கையில் அதிமுகவின் பிடியை உடைக்குமா திமுக கூட்டணி? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 180 பூத்களில் வலுவாகவும், திமுக 130 பூத்களில் வலுவாகவும்
sivagangai assembly constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் சிவகங்கை தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தின் தலைநகராகவும், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் வாழ்ந்த வரலாற்று மண்ணாகவும் திகழும் சிவகங்கையில், வரும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவான கள ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிவகங்கை தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 12 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 38 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 19.4 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக முக்குலத்தோர் 30 சதவீதம் பேர் மிக வலுவாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முத்தரையர், யாதவர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் தலா 10 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 86 சதவீதம் கிராமப்புறங்களைக் கொண்ட ஒரு விவசாயத் தொகுதியாகும்.

சிவகங்கை தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக மாவட்டத் தலைநகராக இருந்தும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்கள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. வரண்ட பூமி என்பதால் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பதும், அரசு நர்சிங் மற்றும் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, அதிமுகவின் பி.ஆர். செந்தில்நாதன் 40.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியின் (சிபிஐஎம்) குணசேகரன் 35 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் அதிமுக 125 பூத்களில் வலுவாகவும், திமுக 90 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 67 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதியில் நாம் தமிழர் கட்சி 14 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 36 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 32 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் 8 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 16 சதவீத வாக்குகளையும் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 180 பூத்களில் வலுவாகவும், திமுக 130 பூத்களில் வலுவாகவும் உள்ளது. சுமார் 60 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

இந்தத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அடிப்படைத் கட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வளர்ச்சி ஆகியவை தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கும். தற்போதைய நிலவரப்படி சிவகங்கை கோட்டையில் இரட்டை இலை சின்னமே முன்னிலையில் இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com