"எல்லா இடத்திலும் அரசியல் பேச முடியாது" - நறுக்கென பதிலளித்த கமல்ஹாசன்!

சட்டமன்றத் தேர்தல் களம் குறித்தும், திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்தும் கேள்வி எழுப்பினார்...
"எல்லா இடத்திலும் அரசியல் பேச முடியாது"  - நறுக்கென பதிலளித்த கமல்ஹாசன்!
Published on
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் நடைபெற்ற ரோட்டரி சங்கம் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து அவர் வெளியே வந்தபோது, வழக்கம் போல செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்த கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் எனப்படும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்ப முயன்றார்.

செய்தியாளரின் கேள்வியை பாதியிலேயே இடைமறித்த கமல்ஹாசன், இது அரசியல் பேசுவதற்கான களம் இல்லை என்பதை மிகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார். "நான் இங்கு வந்திருப்பது நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பற்றிப் பேசுவதற்காக அல்ல, அதை நாம் தனியாகப் பேசிக்கொள்வோம். தற்போது நான் வந்திருப்பது விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விற்காக. ரோட்டரி சங்கம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது சரியாக இருக்காது" என்று அவர் கூறினார்.

மேலும் தனது நிலைப்பாட்டை விளக்கிக் கூறிய அவர், வாழ்க்கையில் எல்லாவற்றையும் அரசியலோடு குழப்பிக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார். "எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அரசியல் பேசிக்கொண்டே இருக்கக் கூடாது. மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரு பக்கம் நடந்துகொண்டே இருக்க வேண்டும். விளையாட்டுத் துறை இயங்க வேண்டும், கல்வித் துறை செயல்பட வேண்டும். இவற்றுடன் இணைந்துதான் அரசியலும் நடக்க வேண்டுமே தவிர, எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தக் கூடாது" என்று தனது பாணியில் நறுக்கென்று பதிலளித்தார்.

இருப்பினும், விடாமல் கேள்வி எழுப்பிய மற்றொரு செய்தியாளர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களம் குறித்தும், திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்தும் கேள்வி எழுப்பினார். கடந்த முறை திருப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட திரு. முருகானந்தம் அவர்கள், இம்முறையும் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளது பற்றியும், அவர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுவாரா அல்லது கூட்டணிக் கட்சியான திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவாரா என்றும் அந்த செய்தியாளர் கேட்டார்.

இதற்கு மிகவும் சுருக்கமாகவும், அதே சமயம் சாதுர்யமாகவும் பதிலளித்த கமல்ஹாசன், "அதை அவர் தான் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டு அந்த விவாதத்தை முடித்துக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com