

மரணம் எப்போது யாருக்கு, எதனால் வரும் என்று சொல்லவே முடியாது. அது ஒரு அழையா விருந்தாளி போல் தான், அது வரும் சமயத்தில் அதனை தடுத்து நிறுத்தும் ஆற்றல் ஒருவருக்கும் இல்லை. சோகத்தில் பெரும் சோகம் ‘புத்திர சோகம்’ என்பர் தாங்கள் வாழும் காலத்திலேயே தங்களின் குழந்தைகளை பறிகொடுப்பதுபோலொரு துயரம் வேறொன்றுமில்லை. அதுவும் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அனைத்தையும்விட்டுவிட்டு வெளிநாட்டிற்க்கு சென்று உழைக்கும் இளைஞர்களின் பெற்றோரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க கூட முடியாது, ஏதேனும் அசம்பாவிதம் ஆனால் முகத்தை கூட பார்க்க முடியாது, அந்தமாதிரியான ஒரு சோகமான சம்பவம்தான், புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சேர்வகாரன்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார், அங்கு திடீரென மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சொந்த ஊருக்கு வருகிறது, அவரின் உடல்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு சேர்வகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு வினிதா என்ற மகளும் செந்தூரன்(25) என்ற மகனும் உள்ளனர்.
வினிதா செவிலியர் படிப்பை முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் கடந்த மூன்று ஆண்டு காலமாக செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணத்திற்காக வரன் பார்ப்பதால் கடந்த ஆறு மாத காலமாக சொந்த ஊரில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவரின் தம்பி செந்தூரன்(25) ஐடிஐ படித்துள்ளார். குடும்ப வறுமையை போக்க கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு எலக்ட்ரிஷியன் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான் சிங்கப்பூரில் உள்ள புகிட்படாக்(Bukit Batok) பகுதியில் கடந்த 18 -ஆம் தேதி செந்தூரன் பணிபுரிந்துகொண்டிருந்த போது திடீரென்று மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் உயிரிழந்த தகவலை உடன் பணிபுரிந்தவர்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ந்துபோன செந்துரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாமல் தவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். மேலும் இளைஞர் செந்தூரன் சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவம் அவரது கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது. இதற்கிடையில் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த செந்தூரனின் வீட்டுக்கு சென்ற தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.அப்போது செந்தூரனனின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி சிறுபாண்மையினர் துறை அமைச்சர் நாசர், சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதன் அடிப்படையில் இன்று மதியம் சிங்கப்பூரிலிருந்து செந்தூரனின் உடல் விமான மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.