மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், ஈரானின் மிக உயரிய அதிகார மையமாகத் திகழ்ந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விதம் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய இந்தத் துல்லியமான தாக்குதலுக்குப் பின்னால் பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் உளவு வலைப்பின்னல் இருந்ததாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் உச்ச தலைவரின் நடமாட்டத்தை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? அதற்காகப் பயன்படுத்தப்பட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் என்ன? என்பவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கேமராக்களில் ஊடுருவிய உளவுப் பிரிவு
ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள சாலைப் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் (Traffic Cameras) கடந்த சில ஆண்டுகளாகவே ஹேக் செய்யப்பட்டு, இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததாகத் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக ஒரு தலைவரின் பாதுகாப்பு என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், டெஹ்ரானின் முக்கிய வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலமே கொமேனியின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுள்ளது. பாஸ்சர் தெரு (Pasteur Street) போன்ற மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பகுதிகளிலும் கூட இந்த உளவு வேலைகள் மிகத் திறமையாகச் செய்யப்பட்டுள்ளன.
கைபேசி மற்றும் இணையப் பின்னணி
கேமராக்கள் மட்டுமின்றி, ஈரானின் கைபேசி நிறுவனங்களின் கோபுரங்கள் மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களையும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (CIA) நீண்ட காலமாகத் தனது கண்காணிப்பில் வைத்திருந்தது. கொமேனி யாருடன் பேசுகிறார், எங்கு செல்கிறார் என்பதைச் செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, ஈரானிய மக்கள் பயன்படுத்தும் ஒரு மத வழிபாட்டுச் செயலியை (Prayer App) ஹேக் செய்ததன் மூலம், அந்தச் செயலியைப் பயன்படுத்தும் பாதுகாப்பு அதிகாரிகளின் இருப்பிடத்தை வைத்து கொமேனி எங்கிருக்கிறார் என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
திட்டமிடப்பட்ட தாக்குதல்
சனிக்கிழமை இரவு கொமேனி தனது உயர்மட்ட ஆலோசகர்களுடன் ஒரு ரகசியக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், சனிக்கிழமை காலையிலேயே அந்த இடத்திற்கு அவர் வந்துவிட்டதை அறிந்தவுடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தங்களது தாக்குதல் நேரத்தை மாற்றியமைத்தன. சுமார் 6 மணிக்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் புறப்பட்டு, 9:40 மணியளவில் ஈரானின் பாதுகாப்பு வளாகத்தின் மீது துல்லியமான ஏவுகணைகளை வீசின. தரைக்கு அடியில் இருந்த பதுங்கு குழிகள் கூடத் தகர்க்கப்படும் வகையில் இந்தத் தாக்குதல் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டது.
பெரிய அளவில் ஏற்பட்ட இழப்புகள்
இந்தத் தாக்குதலில் கொமேனி மட்டுமின்றி, அவரது மகள்கள், பேத்தி மற்றும் மருமகன் ஆகியோரும் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) முக்கியத் தளபதியான முகமது பாக்பூர் மற்றும் கொமேனியின் ஆலோசகர் அலி ஷம்கானி ஆகியோரும் கொல்லப்பட்டனர். இது ஈரானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்துள்ளது.
கொமேனியின் மரணத்திற்குப் பழிவாங்குவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகத் தொழில்நுட்ப ரீதியாகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, இந்தத் தாக்குதலை ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதுகின்றன. அதே சமயம், இது ஒரு மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.