ரஷ்யாவா? அமெரிக்காவா? இந்தியா எடுத்த அதிரடி முடிவு: 500 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தத்தின் ரகசியம் என்ன?

இந்த கூடுதல் வரி நீக்கமானது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது...
ரஷ்யாவா? அமெரிக்காவா? இந்தியா எடுத்த அதிரடி முடிவு: 500 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தத்தின் ரகசியம் என்ன?
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்கள் மீது தான் விதித்திருந்த கூடுதல் 25 சதவீத இறக்குமதி வரியைத் திரும்பப் பெறுவதற்கான அதிரடி உத்தரவில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய காரணத்திற்காக இந்தியாவுக்கு எதிராக இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த வாரம் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ளும் என்று உறுதி அளித்துள்ளதாக டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் எரிசக்திப் பொருட்களை அதிக அளவில் வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் துறையில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு புதிய கட்டமைப்பு ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சுமூகமான பேச்சவார்த்தையைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கூடுதல் வரி நீக்கமானது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

உக்ரைன் போருக்குக் காரணமாக இருக்கும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கான வரிகளை குறைக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த நிர்வாக உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரிகளை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கவும் வாஷிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வரி குறைப்பு தொடர்பான மற்ற விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட மற்றொரு கூட்டு அறிக்கையில், சில குறிப்பிட்ட ரக விமானப் பொருட்கள் மற்றும் அதன் பாகங்கள் மீதான வரிகளும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்திப் பொருட்கள், விமானங்கள், விலை உயர்ந்த உலோகங்கள், தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் நிலக்கரி போன்றவற்றை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மாற்றங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளன.

இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த பதற்றமான சூழல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது போருக்கான நிதியுதவி போல அமையும் என்று அமெரிக்கா கருதி வந்த நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று டிரம்ப் வர்ணித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நட்புறவில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ஆசிய சமூகக் கொள்கை நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வெண்டி கட்லர் இது குறித்துக் கூறுகையில், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரி விகிதமானது, மற்ற அண்டை நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 19 முதல் 20 சதவீத வரியை விடக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அமெரிக்கச் சந்தையில் மற்ற நாடுகளின் போட்டியைச் சமாளித்து இந்தியப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையாவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. டிரம்ப்பின் இந்த அதிரடி முடிவு இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்பது உறுதி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com