நியூயார்க் சுரங்க ரயில் பாதையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி நண்பர்கள்... ரயில் மோதி இருவரும் உயிரிழப்பு

அதே நேரத்தில், அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை...
New York Subway Train Accident
New York Subway Train Accident
Published on
Updated on
2 min read

அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்த 24 வயதான இரு இளம் நண்பர்களின் வாழ்க்கை எதிர்பாராத வகையில் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலைகா சித்ரே மற்றும் நவம் கவுல் ஆகியோர் நியூயார்க் நகர சுரங்க ரயில் பாதையில் இருந்தபோது வேகமாக வந்த ரயில் மோதி உயிரிழந்தனர். இருவரும் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்து 2024-ம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3.14 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மன்ஹாட்டனில் உள்ள ஸ்பிரிங் ஸ்ட்ரீட் சுரங்க ரயில் நிலையத்தில் தெற்கு நோக்கி சென்றுகொண்டிருந்த 4-ம் எண் ரயில், தண்டவாளத்தில் இருந்த இருவரையும் மோதியது. அவசர உதவிக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோதிலும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின்படி, ரயில் நிலையத்துக்குள் ரயில் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருப்பதை அவர் பார்த்துள்ளார். உடனடியாக ரயிலை நிறுத்த முயற்சி செய்ததாகவும், அவசர பிரேக்கை இயக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரயிலை உரிய நேரத்தில் நிறுத்த முடியாததால் இருவரும் ரயிலில் சிக்கினர். சுமார் 100 பயணிகள் இருந்த ரயிலில் இருந்து பின்னர் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துக்கு முன்பு இருவரும் எப்படி தண்டவாளத்துக்குச் சென்றார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆரம்பகட்ட தகவல்களில், நவம் கவுல் முதலில் தண்டவாளத்தில் விழுந்திருக்கலாம் அல்லது தானாக கீழே இறங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு உதவுவதற்காக மலைகா சித்ரேவும் தண்டவாளத்தில் இறங்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். இருவரும் தண்டவாளத்தில் இருந்தபோது மலைகா, நவமை தன்னுடைய பக்கம் இழுத்ததாகவும் ரயில் ஓட்டுநர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்துக்கு முன்பான சில நொடிகளை காட்டும் காணொளியும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் இருவரும் தண்டவாளத்தில் அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் விசாரணையில் முக்கிய ஆதாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

விசாரணையின் ஒரு பகுதியாக, இருவரும் மது அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருளின் தாக்கத்தில் இருந்தார்களா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் நெருங்கி வந்ததை உணர முடியாத அளவுக்கு அவர்கள் குழப்பமான நிலையில் இருந்திருக்கலாம் என்ற கோணமும் விசாரணையில் பார்க்கப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இருவரின் மரணத்துக்கு தற்கொலை காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், அதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தற்கொலை கோணத்தையும் விசாரணையில் இருந்து அதிகாரிகள் முழுமையாக நீக்கவில்லை. மலைகா சித்ரே மற்றும் நவம் கவுல் இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள். ஒரே பல்கலைக்கழகத்தில் படித்ததுடன், ஒரே சமூக வட்டாரத்திலும் பழகி வந்ததாக அவர்களை அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் நியூஜெர்சியில் வளர்ந்தவர்கள். பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பிறகு, தங்களது தொழில் வாழ்க்கையிலும் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

மலைகா சித்ரே ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தார். அதனுடன் வணிக நிர்வாகத்தில் சிறப்புப் பாடமும் படித்திருந்தார். படிப்பை முடித்த பிறகு பிரின்ஸ்டனில் உள்ள அகாடியா பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாடு தொடர்பான பணியில் சேர்ந்தார். மேலும், தனது கல்வியைத் தொடரும் நோக்கில் பிலடெல்பியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழக மருந்தியல் பள்ளியில் மருந்தியல் முனைவர் பட்டப்படிப்பையும் சமீபத்தில் தொடங்கியிருந்தார். நவம் கவுல் ரட்கர்ஸ் பிசினஸ் பள்ளியில் நிதிப் பிரிவில் பட்டம் பெற்றவர். 2025-ம் ஆண்டு முதல் நியூயார்க்கில் உள்ள ப்ளூம்பெர்க் நிறுவனத்தில் நிதித் தரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவரது தொழில் வாழ்க்கையும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இருவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களை அறிந்தவர்கள், இருவரும் படிப்பிலும் தொழிலிலும் கவனம் செலுத்தி எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருந்த இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக நவம் கவுலின் வாழ்க்கையில் இதுபோன்ற தீவிரமான முடிவை எடுக்கத் தூண்டும் காரணம் எதுவும் தங்களுக்கு தெரியாது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இருவரும் தண்டவாளத்தில் இருந்ததற்கான உண்மையான காரணம், அவர்கள் அங்கு எப்படி சென்றார்கள், அந்த நேரத்தில் அவர்களின் உடல்நிலை என்னவாக இருந்தது போன்ற கேள்விகளுக்கு விசாரணை மூலம் மட்டுமே பதில் கிடைக்கும். நியூயார்க் காவல்துறை சம்பவம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் ஆரம்பகட்ட விசாரணையை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், இறுதி முடிவு அதிகாரப்பூர்வ விசாரணை நிறைவடைந்த பிறகே தெளிவாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com