இலவச அறிவிப்புகள்: மத்திய அரசு ஏன் ஒரு குழு அமைக்க கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

இலவச அறிவிப்புகள்: மத்திய அரசு ஏன் ஒரு குழு அமைக்க கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது  தொடர்பான வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு:

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்படும் இலவசம் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதில் எந்த குழப்பமும் வராது என்றும், அதேசமயம் தேர்தலுக்கு பிறகு, அரசு ஆட்சி அமைந்த பின்னர் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களில் நீதிமன்றம் தலையிடுவது சிக்கலான விவகாரம், அபாயகரமானதும் கூட எனவும், வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்:

இதனைதொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தல் இலவசம் தொடர்பாக ஆய்வு செய்ய ஆணையமோ அல்லது குழுவோ அமைத்தால், அரசியல் கட்சிகள் எதிர்க்கவே செய்வார்கள் என்பதால், இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்னர், நீண்ட ஆழமான விவாதம் தேவை என வலியுறுத்தினார்.

நீதிபதி ரமணா:

இதனை ஆமோதித்து பதிலளித்த தலைமை நீதிபதி ரமணா, இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பதற்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இது  தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு ஏன் ஒரு குழு அமைக்க கூடாது? இந்த ஆடம்பர இலவச அறிவிப்புகள் விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஏன் ஒரு முடிவை எட்ட கூடாது? என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Former-MLA-Arukutty-joins-DMK

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்:

அதற்கு பதிலளித்து பேசிய, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவச அறிவிப்புகள் கடும் விளைவை ஏற்படுத்துவதாகவும், குறிப்பாக இலவச மின்சாரம் என்ற அறிவிப்பால் பல மின் பகிர்மான கழங்கள் இழப்பை சந்திப்பதாகவும் கூறினார். மேலும், சில அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமை என கோருவதாகவும், சில கட்சிகள் இலவசம் என்ற ஒரு அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முற்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து, தேர்தல் இலவச அறிவிப்பு கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதத்திலும் உதவி செய்யும் எனவும், இதற்கு என்று கமிட்டி அமைத்தால், அதன் அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிட்டார்:

இதையடுத்து, அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்ட தலைமை நீதிபதி ரமணா, இலவசங்அள் அறிவிப்பு குறித்து  விவாதித்தே முடிவு செய்ய வேண்டியுள்ளதால், இந்த வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிட உத்தரவிட்டார்.