பொதுப்பாதையை சொந்தம் கொண்டாடி மனு; அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

பொதுப்பாதையை சொந்தம் கொண்டாடி மனு; அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

பொதுப் பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தும் நிலம், தனக்கு சொந்தமானது எனக் கூறி, பட்டா வழங்கக் கோரிய வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரம் தாலுகாவுக்கு உட்பட்ட கொளத்தூர் கிராமம், ஜெயந்தி நகரில் தனது தாயாரால் எழுதி வைக்கப்பட்ட 3 ஆயிரத்து 710 சதுர அடி நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக்  கோரி ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை, வருவாய் துறை ஆவணங்களுடன் சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி வருவாய்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரர் குறிப்பிட்ட சொத்து குறித்த ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்றும், இந்த நிலங்களுக்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரர் குறிப்பிட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதி பொது சாலையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாகவும், மற்றொரு பகுதி ரெஜியா பேகம் என்பவருக்கு சொந்தமானது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலத்தை அபகரிப்பதற்காக, நீதித்துறை நடைமுறைகளை தவறாக பயன்படுத்த முயற்சித்ததாக கூறி, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அபராதத்தொகையை ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:''தமிழில் பேச வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது'' இல.கணேசன் சோகம்!