கொள்ளையடிக்க வந்த இடத்தில் விபூதி அடித்து சென்ற கொள்ளையர்கள்!

தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் கைரேகை பதிவாகாமல் இருக்க விபூதி அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அம்பாபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வழக்கம்போல் ஊழியர்கள் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றுள்ளனர். 

நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க நினைத்து பல நாட்கள் நோட்டமிட்ட மர்ம நபர்கள், சனிக்கிழமை இரவு அதிகமாக வசூல் பணம் இருக்கும் என நினைத்து கைரேகை பதிவு ஆகக்கூடாது என்பதற்காக விபூதி மற்றும் குங்குமம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு சென்று நிதி நிறுவன கதவை உடைத்துச் சென்றுள்ளனர்.   

நிதி நிறுவனத்தில் உள்ளே இருந்த பீரோவில் எவ்வளவு நேரம் தேடிப்பார்த்தும் அதில் பணம் இல்லாமல் வெறும் கணக்கு புத்தகங்கள் மட்டுமே இருந்ததுள்ளது. மேலும் அருகில் இருந்த லாக்கரை உடைக்க முடியாததால்  ஏமாற்றம் அடைந்த மர்ம நபர்கள் கைரேகை தெரியாமல், இருக்க எடுத்து வந்த விபூதி குங்குமத்தை விரக்தியில் கதவு மற்றும் பீரோ உள்ளிட்டவற்றில் பூபதி அடித்து விட்டு ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று வழக்கம் போல் ஊழியர் ஒருவர் வந்து பார்த்த பொழுது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் திருட முயற்சி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: "அடிமைகளுடன் சேர்த்து எஜமானர்களையும் விரட்டியடிப்போம்" அமைச்சர் உதயநிதி பேச்சு!!