டிக்கெட் எடுத்தவர்களின் இருக்கையை அபகரித்த திமுகவினர்!!

டிக்கெட் எடுத்தவர்களின் இருக்கையை அபகரித்த திமுகவினர்!!

சேலத்தில், மாமன்னன் திரைப்படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த டிக்கெட் எடுக்காத தி.மு.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத்பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாமன்னன். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின், கதையே சமூகநீதியைக் காப்பாற்றுவதுதான்.

இந்த  நிலையில் சேலம் மாவட்டத்தின் லைன்மேடு பகுதியில் உள்ள கே.எஸ். திரையரங்கில் மாமன்னன் ஓடிக்கொண்டிருக்க, இந்த திரையரங்கத்துக்கு இளைஞர் ஒருவர் தன் மனைவி, குழந்தையுடன் படம் பார்க்க சென்றுள்ளார். 

ஆனால், அதற்கு முன்பாகவே சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் டிக்கெட் எடுக்காமலேயே தியேட்டருக்குள் சென்று படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதனால் ஏற்கெனவே டிக்கெட் எடுத்திருந்தவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்காமல் வெளியே துரத்தப்பட்டுள்ளனர். கையில் டிக்கெட் இருந்தும், இருக்கை பறிக்கப்பட்டதால் கைக்குழந்தையுடன் அந்த இளம்பெண் வெகுநேரமாக வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார்.

தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லையென்றால், பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள் என பெண்மணி கூறியதையடுத்து, கோபமடைந்த திரையரங்க ஊழியர்கள், கடுமையாக திட்டியனுப்பியதால், அந்த பெண்மணியும் அவரது கணவரும் படம் பார்க்காமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இந்நிலைமை அவர்களுக்கு மட்டுமல்ல, அந்நேர காட்சிக்கு வந்த பலருக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக நீதி குறித்து எடுக்கப்பட்ட படத்தை திரையரங்குக்குள் ஓட விட்டுவிட்டு, திரையரங்கின் வெளியே அநியாயம் செய்துள்ளனர்.  

இதையும் படிக்க: ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் 'மிதவை உணவக கப்பல்' !