கள்ளச்சாரயம் விற்ற 3 பேர் குண்டாஸில் கைது...!

கள்ளச்சாரயம் விற்ற 3 பேர் குண்டாஸில் கைது...!

கீழ்வேளூரில் கள்ளச்சாரயம் விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட மூவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.   

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ராதாமங்கலம்  நடுத்தெருவை சேர்ந்த கொல்லக்காட்டு குமார் இவரது  மனைவி பூங்கொடி (வயது50)  அத்திப்புலியூர் ஊராட்சி கீழத்தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் இவரது மனைவி வனஜா (49). நாகை தாலுகா ஆலங்குடி ராமாபுரம் பகுதியை சேர்ந்த தவமணி மகன் தங்கம் என்கிற வினோத் (26). 

இவர்கள் 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது கீழ்வேளூர் காவல்  நிலையத்தில் சாராய விற்பனை தொடர்பாக வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக பூங்கொடி, வனஜா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையிலும், தங்கம் என்கிற வினோத் நாகை மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.

மேலும்,  3 பேரும் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.  இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர்  ஜானி டாம் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். 

அதனை தொடர்ந்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை, திருவாரூர் சிறையில் இருந்த 3 பேரையும்  குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க      |  கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் மாற்றம்?