
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடைந்தது. இதனையடுத்து மாணவர்களுக்கான கோடை விடுமுறையானது சுமார் ஒரு மாதம் காலம் விடப்பட்டிருந்தது. ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாமல் உக்கிரமாக இருந்து வருவதால் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படவிருந்தது.
இருப்பினும் 18 மாவட்டத்தில் வெயிலானது 100 டிகிரியை தாண்டியது. எனவே, வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளதால் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.