
வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் அப்படத்தில் நடித்து வந்த துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னணி இருக்குநர் பாலா
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்து வந்த அவர், வணங்கான் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவர் இப்படத்தை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் தொடங்கினார். இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2-டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி கடந்தாண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரியில் ஷூட்டிங்கையும் நடத்தினர்.
சூரியாவுக்கும் பாலாவுக்கு இடையே சண்டை
அங்கு ஒரு மாதம் ஷூட்டிங் முடிந்த பின்னர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் இருவரும் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டதாக சர்ச்சை வெடித்தது. பின்னர் அது உண்மையில்லை என சூர்யா தரப்பு மறுத்தாலும், படப்பிடிப்பு அடுத்து தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இதையடுத்து இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக அறிக்கை மூலம் அறிவித்தார் பாலா.
கன்னியாகுமரி - அருண்விஜய் நடிப்பு
சூர்யா விலகினாலும் வணங்கான் படத்தை கைவிட விரும்பாத அவர், மீண்டும் அருண்விஜய்யை வைத்து அப்படத்தை எடுத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது புது பிரச்சனை கிளம்பி உள்ளது. வணங்கான் படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து துணை நடிகைகள் சிலரை ஜிதின் என்கிற ஒருங்கிணைப்பாளர் அழைத்து வந்துள்ளார். இதில் லிண்டா என்கிற பெண்ணும் ஒருவர்.
துணை நடிகை சம்பளம் கேட்டதற்கு அடி
இவர்களுக்கு 3 நாள் நடிப்பதற்கு மொத்தமாக ரூ. 22 ஆயிரத்து 600 சம்பளம் என பேசி அழைத்து வந்திருக்கிறார் ஜிதின். ஆனால் சொன்னபடி சம்பளத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்கப்போன துணை நடிகை லிண்டாவை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி இருக்கிறார் ஜிதின். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நடிகை லிண்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் வணங்கான் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.