வீணாகிறது மக்கள் வரிப்பணம்: டெல்லி துணை முதலமைச்சர்

வீணாகிறது மக்கள் வரிப்பணம்: டெல்லி துணை முதலமைச்சர்

டெல்லி மாநகராட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.6000 கோடி சுங்கவரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக் கோரி டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இரண்டு சுங்க வரி நிறுவனங்களுடன் இணைந்து டெல்லி கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக டெல்லி மாநகராட்சியின் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றசாட்டு வைத்துள்ளது.  தினமும் 10 லட்சம் வணிகம் தொடர்பான வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதாகவும் அவற்றிடமிருந்து வரி வசூலிக்கப்படுவதாகவும் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

சுங்க வரி வசூல்:

டெல்லிக்குள் நுழையும் வணிக வாகனங்கள் சுற்றுசூழல் சான்றிதழுக்காக ரூ.700 முதல் ரூ.1400 வரை வரி செலுத்துகிறது.    மெலும் வாகனத்தின் அளவு மற்றும் வகையை பொறுத்து ரூ.100 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது.டெல்லியில் வரி வசூலிக்கும் நிறுவனமாக டெல்லி மாநகராட்சி செயல்படுகிறது.  வரி வசூலிக்கும் உரிமையை டெண்டர் மூலமாக தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி வழங்குகின்றன.

ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு:

சுங்கசாவடி வரி வசூலில் ரூ. 6000 கோடி ஊழல் செய்ததாக டெல்லி மாநகராட்சி மீது மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி மாநகராட்சி ஒரு தனியார் நிறுவனத்திற்கு வரி வசூல் செய்ய ஒப்பந்தம் அளித்ததாகவும் முதல் ஒரு ஆண்டிற்கு மட்டும் அந்நிறுவனம் 1200 கோடி ரூபாயை அளித்ததாகவும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு நான்கு வருடங்களாக வரிப்பணத்தை தனியார் நிறுவனம் வழங்கவில்லை எனவும் ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் தனியார் நிறுவனத்தின் மீது டெல்லி மாநாகராட்சி எடுக்கவில்லை எனவும் வரிவசூல் செய்யும் ஒப்பந்தத்தை வேறு நிறுவங்களுக்கு அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார் சிசோடியா.

மேலும் 2021ல் அந்த தனியார் நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் வழங்கியுள்ளது எனவும் கூறியுள்ளார் சிசோடியா.

மேலும் படிக்க: ஆம் ஆத்மி பெட்ரோலுக்கு எங்கே போவான்?- எம் பி கனிமொழி சரமாரி கேள்வி

டெல்லி மாநகராட்சி விளக்கம்:

ஒப்பந்தம் அளிக்கப்பட்ட நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர்களால் ஒப்பந்த பணத்தை வழங்க முடியவில்லை என தனியார் நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அவர்கள் உயர்நீதிமன்றத்திலும் விளக்கமளித்துள்ளனர் எனவும் டெல்லி மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: ஒரே கட்சி முறையை நோக்கி நகர்கிறதா இந்தியா.....!!!!